Published : 16 Aug 2020 08:11 AM
Last Updated : 16 Aug 2020 08:11 AM

ரூ. 80 ஆயிரம் ‘கரோனா’ நிவாரண நிதி வழங்கிய யாசகருக்கு சுதந்திர தினவிழாவில் விருது அறிவிப்பு: கடைசிவரை நன்கொடையாளரை கண்டுபிடிக்க முடியவில்லை

கரோனா ஊரடங்கில் தயாளகுணம் கொண்ட பலர், இல்லாதோருக்கு உதவிக்கரம் நீட்டினர். இந்த கரோனா தொற்று பரவல் சமூகத்துக்கு பல நல்ல உள்ளங்களையும் அடையாளம் காட்டி உள்ளது.

ஆனால், வீடு, குடும்பம் என எதுவுமே இல்லாமல் தேசாந்திரியாகத் திரியும் யாசகர் பூல்பாண்டி என்பவர், மதுரையில் தான் யாசகமாக பெற்ற பணத்தை சிறுக சிறுக சேமித்து 8 முறை தொடர்ந்து தலா ரூ.10 ஆயிரம் வீதம் ஆட்சியர் டிஜி. வினயிடம் கரோனா நிவாரண நிதியாக ரூ.80 ஆயிரம் வழங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த இவர்,குடும்பத்தினருடன் நல்ல நிலையில்தான் இருந்துள்ளார். மனைவி இறந்த பிறகு உறவினர்கள் ஆதரவின்றி பூல்பாண்டி யாசகம் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஆரம்பத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற இடங்களில் யாசகம் பெற்ற பூல்பாண்டி கடந்த ஒரு ஆண்டாக மதுரையில் கோயில்கள், பஸ் நிலையங்கள், சுற்றுலாத் தலங்களில் யாசகம் பெற்று வந்தார். அப்படி யாசகமாக பெற்ற பணத்தை 2 அல்லது 3 வாரங்களுக்கு ஒருமுறை ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் வீதம் 8 முறை ரூ.80 ஆயிரம் கரோனா நிவாரண நிதியாக வழங்கினார்.

தூத்துக்குடியில் இருந்தபோது இதேபோல யாசகம் பெற்ற பணத்தை பள்ளிகளுக்கும், கிராமங்களுக்கும் உதவியுள்ளார். அவரது பொதுநலத்தை அறிந்த மக்களும், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் தாராளமாக யாசகம் வழங்கி ஊக்குவித்தனர்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘மக்கள் வழங்கிய பணத்தைஅவர்களுக்கே திரும்பிக் கொடுக்கிறேன். இதில் எனக்கு என்ன பெருமை இருக்கிறது. கரோனா தொற்று முடியும் வரை யாசகம் பெற்ற பணத்தை நோய் தடுப்பு பணிக்காக கொடுத்துக் கொண்டே இருப்பேன்’ என்றார்.

விருதுக்கு தேர்வு

இந்நிலையில் மதுரையில் சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் நடந்தபோது, கரோனா தடுப்பு பணியில் சிறப்பாகச் செயல்பட்ட தன்னார்வலர்களுக்கு விருது வழங்கும் பட்டியலில் 7 பேரை ஆட்சியர் டி.ஜி. வினய் தேர்வு செய்தார். அதில், 5-வது பெயராக யாசகர் பூல்பாண்டியின் பெயர் இடம் பெற்றிருந்தது அதிகாரிகளை ஆச்சரியமடைய வைத்தது.

இந்த விருதை வழங்க பூல்பாண்டியை கண்டுபிடித்து நேற்று நடந்த சுதந்திர தினவிழாவுக்கு அழைத்து வரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் அவரை கடந்த 2 நாட்களாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தனிக்குழு அமைத்து அதிகாரிகள் யாசகர் பூல்பாண்டியைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x