Published : 12 Aug 2020 07:35 PM
Last Updated : 12 Aug 2020 07:35 PM
சென்னை விமான நிலையத்தில் பார்சல்கள் பெறப்படும் அயல்நாட்டு அஞ்சலகத்தில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்திலிருந்து வந்த பார்சல்களில் ரூ.1.6 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் சிக்கியது.
இதுகுறித்து சுங்கத்துறை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள அயல்நாட்டு அஞ்சலகத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்த சந்தேகத்துக்குரிய பார்சல்கள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அதிகாரிகள் அதை சோதனையிட்டனர். அவைகள் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்திலிருந்த வந்த இரண்டு பார்சல்கள் என தெரியவந்தது.
பெல்ஜியத்திலிருந்து வந்த பார்சல் முதலில் சோதனை செய்யப்பட்டது. இதில் செயற்கையான சிறுத்தைத் தோல் துணியும், பிற பொருட்களும் காணப்பட்டன. அந்தத் துணியைப் பிரித்து பார்த்தபோது ஒன்பது பொட்டலங்களில் ரெட் புலி, ஹெனகே என்ற பெயருள்ள ஆரஞ்சு வண்ண போதை மாத்திரைகள் இருந்தன.
மொத்தம் இருந்த 4060 மாத்திரைகள் இருந்தன. அவைகளின் மதிப்பு ரூ.1.2 கோடியாகும். பார்சல் யாருக்கு அனுப்பப்பட்டது என விசாரணை நடத்தியதில் அவைகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்த ஒருவருக்கு அனுப்பப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அங்குச் சென்று சோதனை நடத்தியதில் அது போலியான முகவரி என்பது தெரியவந்தது.
மற்றொரு பார்சலான நெதர்லாந்திலிருந்து வந்த பார்சலை பிரித்துப் பார்த்தபோது, அதில் மை பிராண்ட் எனப்படும் போதை மாத்திரைகள் பொட்டலங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 1150 மாத்திரைகளும், 100 கிராம் எம்டிஎம்ஏ கிறிஸ்டலும், ஒரு கிராம் மெத்தாகுவலோன் பொடியும் இருந்தது.
இவற்றின் மதிப்பு ரூ.45 லட்சமாகும். இந்தப் பார்சல் ஆந்திராவிலிருந்த ஒருவருக்கு அனுப்பப்பட்டிருந்தது. அவர், போதை மருந்து கடத்தலுக்காக ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இந்தப் பார்சல்களை கைப்பற்றிய சுங்கத்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்”.
இவ்வாறு சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment