Published : 03 Aug 2020 11:53 AM
Last Updated : 03 Aug 2020 11:53 AM
மும்மொழித் திட்டத்தை எதிர்த்ததற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை என்பதை மத்திய கல்வித்துறை அமைச்சகம் எனப் பெயர் மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம், அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.
எட்டாம் வகுப்பு வரை பொதுத்தேர்வு, கல்லூரிகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வு, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றின் காரணமாக, திமுக, பாமக, மதிமுக, தமிழக காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகின்றன.
மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று (ஆக.3) முதல்வர் பழனிசாமிக்குக் கடிதம் எழுதினர்.
இந்நிலையில், இன்று புதிய கல்விக் கொள்கை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு, மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக்கொள்ள பிரதமரை முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், "தேசிய கல்விக் கொள்கை - 2020 பெயரால் வரும் மும்மொழித் திட்டத்தை எதிர்த்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி!
மொழிக்கொள்கை மட்டுமல்ல, கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
#NEP2020 பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள @CMOTamilNaduவுக்கு நன்றி!
மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்! pic.twitter.com/WIimFHlUe6— M.K.Stalin (@mkstalin) August 3, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment