Published : 28 Jul 2020 01:28 PM
Last Updated : 28 Jul 2020 01:28 PM
ஜூலை 30-ம் தேதி அன்று திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காணொலி வழியாக நடைபெற உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக உள்ளது. திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக என பெரிய அளவில் எதிர்க்கட்சி அணி உள்ளது. திமுகவுக்கு அதிமுகவுக்கு இணையான சட்டப்பேரவை உறுப்பினர்களும், தமிழகத்தின் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து தேனி தவிர அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வென்றுள்ளது.
தற்போது தமிழகத்தில் திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் திரண்டு மக்கள் பிரச்சினையில் போராடி வருகின்றன. கரோனா பேரிடர் தொற்று சிகிச்சை, மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான 4 அவசரச் சட்டங்கள், சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை -2020, இட ஒதுக்கீடு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் தற்போது தமிழகத்தில் உள்ள நிலையில் நேற்று திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது.
இந்நிலையில் வரும் 30-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். காணொலிக் காட்சி வாயிலாக மாலை 4.30 மணிக்குக் கூட்டம் தொடங்குகிறது.
இந்தக்கூட்டத்தில் கரோனா பிரச்சினை, ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் தமிழகம் முன் உள்ள பிரச்சினை, சட்டப்பேரவை இடைத்தேர்தல், திமுகவுக்கு எதிராக எழுந்துள்ள பிரச்சாரங்களை எதிர்கொள்வது, தமிழகத்தில் உள்ள முக்கியப் பிரச்சினைகள் குறித்துப் பேசப்படும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
“திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் 30-7-2020 வியாழக்கிழமை மாலை 4.30 மணி அளவில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். அதுபோது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment