Published : 11 Jul 2020 03:25 PM
Last Updated : 11 Jul 2020 03:25 PM
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:
''கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியானது தமிழகத்தின் வளிமண்டல மேலடுக்கில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி, தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
நாளை சேலம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. திருத்தணி, (திருவள்ளூர்), காஞ்சிபுரம் தானியங்கி மழைமானி (காஞ்சிபுரம்) வெம்பாக்கம் (திருவண்ணாமலை) பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பதிவானது. விரிஞ்சிபுரம் (வேலூர்), அரக்கோணம் (ராணிப்பேட்டை) பகுதிகளில் தலா 5 செ.மீ. மழை, மேல் ஆத்தூர் (வேலூர்), காஞ்சிபுரம், ஏற்காடு (சேலம்), செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்) பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவானது.
திருப்பத்தூர் (சிவகங்கை), கொளப்பாக்கம் (செங்கல்பட்டு), தருமபுரி, குடியாத்தம் (வேலூர்), செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர் (செங்கல்பட்டு), ஆற்காடு (ராணிப்பேட்டை) பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பதிவானது.
ஜூலை 11-ம் தேதி அன்று வடக்கு கடலோர, கேரள கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை 11, 12-ம் தேதிகளில் கடலோர கர்நாடகா, லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை 11 முதல் ஜூலை 15-ம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை 14 முதல் ஜூலை 15-ம் தேதி வரை வடக்கு அந்தமான் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்கண்ட தேதிகளில் மீனவர்கள் மேற்கண்ட பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்''.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment