Published : 29 Jun 2020 07:34 AM
Last Updated : 29 Jun 2020 07:34 AM

திருச்சி புறநகரைவிட மாநகரில் இருமடங்காக அதிகரித்த தொற்று: முழு ஊரடங்கு அச்சத்தில் பொதுமக்கள்

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ள நிலையில், புறநகர் பகுதிகளை விட மாநகர் பகுதிகளில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 501. இதில், 302 பேர் குணமடைந்துள்ள நிலையில், எஞ்சிய 197 பேர் சிகிச்சையில் உள்ளனர். திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை புறநகரப் பகுதி யைக் காட்டிலும் மாநகரப் பகுதி யில் பாதிக்கப்பட்டோரின் எண் ணிக்கை இரு மடங்கு அதிகமாக உள்ளது.

திருச்சி மாநகராட்சியில் கோட்டம் வாரியாக அரியமங்கலத் தில் 70 பேர், கோ.அபிஷேகபுரத்தில் 91 பேர், பொன்மலையில் 81 பேர், ஸ்ரீரங்கத்தில் 99 பேர் என ஜூன் 27-ம் தேதி வரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 341. இதில், அரியமங்கலத்தில் 31 பேர், கோ.அபிஷேகபுரத்தில் 59 பேர், பொன்மலையில் 44 பேர், ஸ்ரீரங்கத்தில் 61 பேர் என 195 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்புகள் போக எஞ்சிய 143 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகளில் ஓரிரு வார்டுகளைத் தவிர எஞ்சிய அனைத்து வார்டுகளிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட 160 பேரில் இதுவரை 107 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு போக எஞ்சிய 52 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் உள்ள கரோனா பாதுகாப்பு மையத்தில் 82 பேர், மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 78 பேர், தனியார் மருத்துவமனைகளில் 37 பேர் என மாவட்டத்தில் 197 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தொடக்கத்தில் பிற மாவட்டங் களைக் காட்டிலும் திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று குறைவாக இருந்து, அதுவும் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாவட்டத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத் தப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி மற்றும் மருத்துவத் துறை அலுவ லர்கள் கூறியது:

திருச்சி மாவட்டத்தில் தொடக் கத்தில் கரோனா தொற்று குறைவாக இருந்தது. சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலமாகவும், அரசின் வழிகாட்டுதல்களை அலட்சியப் படுத்தியவர்களாலும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தது. திருச்சி மாவட்டத்தில் புறநகரப் பகுதியைக் காட்டிலும் மாநகரப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதற்கு சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்காததே காரணம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x