Published : 11 Jun 2020 07:13 AM
Last Updated : 11 Jun 2020 07:13 AM
சேலத்தில் இன்று (11-ம் தேதி) ஈரடுக்கு மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்காக, தமிழக முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார்.
சேலம் 5 ரோடு சாலை சந்திப்பு மற்றும் 4 ரோடு சாலை சந்திப்பு ஆகிய இடங்களிலும் அதனுடன் இணையும் சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இப்பிரச்சினைக்கு தீர்வாக, சேலம் குரங்குசாவடி முதல் புதிய பேருந்து நிலையம் வழியாக அண்ணா பூங்கா வரை 5.01 கிமீ நீளத்துக்கு புதிதாக ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது.
இதேபோல, சேலத்தின் வணிகப் பகுதியான லீ பஜார்- மார்க்கெட் ரயில் நிலையத்துக்கு இடையே, ரயில் பாதையால் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க, மற்றொரு மேம்பாலமும் கட்டப்பட்டு வந்தது. சேலம் மக்களின் நீண்ட கால பிரச்சினைகளுக்குத் தீர்வாக கட்டப்பட்டு வந்த இரு பாலங்களின் கட்டுமானப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்தன. இதையடுத்து, சேலத்தில் இன்று (11-ம் தேதி) காலை நடைபெறும் விழாவில், இவ்விரு பாலத்தையும் மக்கள் பயன்பாட்டுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார்.
மேலும், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, நீதித்துறை சார்பில் சேலம் சட்டக் கல்லூரி மற்றும் மாணவ, மாணவியர்கள் விடுதிக் கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார்.
நாளை (12-ம் தேதி) மேட்டூர் அணையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் பழனிசாமி, அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment