Published : 02 May 2020 09:40 PM
Last Updated : 02 May 2020 09:40 PM
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய நிகழ்ச்சிகளான முன்கூட்டியே நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்கள், எதிர்பாராத மரணம் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பான காரணங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வது குறித்து ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
“கரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுக்கும் விதத்தில் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் தங்களுடைய சில குறிப்பிட்ட அத்தியாவசிய நிகழ்ச்சிகளான முன்கூட்டியே நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்கள், எதிர்பாராமல் ஏற்படும் மரணத்திற்கான இறுதிச்சடங்குகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் மேற்கொள்ள அனுமதிச் சீட்டு பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது தமிழ்நாடு அரசு மாநில இ- பாஸ் கட்டுப்பாட்டு அறையின் வாயிலாக http://tnepass.tnega.org என்ற இணையதளத்தின் வழியே அவரசஅனுமதிச் சீட்டாக வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி முன்கூட்டியே நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்கள், அவசர மருத்துவ சிகிச்சை (ரத்த சொந்தங்களுக்கு மட்டும்) மற்றும் எதிர்பாராவிதமான மரணம் (ரத்த சொந்தங்களுக்கு மட்டும்) அரசு வழிகாட்டுதலின்படி அவசரப் பயண அனுமதிச் சீட்டு (Emergency pass) வழங்கும் அதிகாரம் மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதனால் http://tnepass.tnega.org என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயண அனுமதிச் சீட்டினைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. எனவே, அவசர அனுமதிச் சீட்டு பெற பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டாம் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்”.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT