

பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சேத்துமடை வனப் பகுதியில் இரு தினங்களுக்கு முன் வனத் துறையினர் ரோந்து சென்றனர்.
போத்தமடை அருகே 10 வயது ஆண் புலியின் சடலமும், புங்கன் ஓடை பகுதியில் 8 வயது பெண் புலியின் சடலமும் கிடந்தது தெரியவந்தது.
வனத் துறை அதிகாரிகள், வன விலங்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்னிலையில், வனக் கால்நடை மருத்துவர்களால் உடல் கூராய்வு செய்யப்பட்டது. புலிகளின் உடலில் இருந்து ரத்தம், தேவைப்படும் உடல் உறுப்புக்களை சேகரித்த பின்னர், தீவைத்து எரித்தனர்.
வனத் துறையினர் கூறும்போது, "இரு புலிகளின் வயிற்றிலும் காட்டுப்பன்றியின் இறைச்சி உள்ளது. காட்டுப்பன்றியை கொன்று, அதன் இறைச்சியில் விஷம் கலந்து புலிகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. புலிகளின் உடல் உறுப்புகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகிறோம்" என்றனர்.