Published : 11 May 2014 11:54 AM
Last Updated : 11 May 2014 11:54 AM

துணை நடிகர் கொலை?- நடிகையிடம் விசாரணை: உடலை தோண்டியெடுக்க முடிவு

சென்னையில் நடிகையுடன் வசித்த துணை நடிகர், நெல்லையில் கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவரது சடலம் புதைக்கப்பட்ட சம்பவம் மூன்று மாதங்களுக்கு பின் தெரிய வந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சூசை மரியானின் மகன் ரெனால்ட் பீட்டர் பிரின்சோ (35). இவர், பாவூர்சத்திரத்தில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் நடத்தி வந்தார். மனைவியை விவாகரத்து செய்த இவர், பயிற்சி மையத்தையும் நடத்த முடியாமல் சென்னை சென்றார். `காகிதபுரம்’ என்ற சினிமாவில், துணை நடிகராக நடித்தார். சென்னையில், `சாம்பவி’ என்ற சினிமாவில் நடித்த ஸ்ருதி சந்திரலேகாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர்.

பிப்ரவரி மாதம் ரெனால்ட் பீட்டர் பிரின்சோவைக் காணவில்லை என துணை நடிகை ஸ்ருதி சந்திரலேகா, சென்னை மதுரவாயல் போலீஸில் புகார் செய்தார். அவரை போலீஸார் தேடி வந்தனர். இதனிடையே, பாளையங் கோட்டை டி.வி.எஸ். நகர் பைபாஸ் சாலை அருகே சந்தேகத்துக்கு இட மளிக்கும் வகையில் ஆண் உடல் புதைக்கப்பட்டு இருப்பதாகவும், அது, ரெனால்ட் பீட்டர் பிரின் சோவின் உடல் என்றும் சென்னை போலீஸாருக்கு தகவல் வந்தது. துணை நடிகை ஸ்ருதி சந்திரலேகா மற்றும் பீட்டர் பிரின்சோவின் நண்பர் களிடம் விசாரணை நடத்தினர்.

சனிக்கிழமை நெல்லை வந்த சென்னை போலீஸார், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அது, பீட்டர் பிரின்சோ உடல்தான் என தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை அந்த இடத்தை தோண்டி, உடலை பரிசோதனை செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x