Published : 12 Mar 2020 04:44 PM
Last Updated : 12 Mar 2020 04:44 PM

சர்வதேச சிறுநீரக தினம்: மாற்றுஅறுவைசிகிச்சை இயலாத போது வீட்டிலேயே டயாலிசஸ் செய்துகொள்ளலாம்: நிபுணர்கள் யோசனை

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு அதன் ஒரு பகுதியாக கோழிக்கோடு நகரில் பேரணி | கோப்புப் படம் | புகைப்படம்: எஸ்.ரமேஷ் குருப்

மாற்றுஅறுவைசிகிச்சை செய்துகொள்ள இயலாத போது வீட்டிலேயே நோயாளிகள் டயாலிசஸ் செய்துகொள்ளலாம் என்று மதுரை சிறுநீரக மையம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை ஆராய்ச்சி நிறுவன மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

ஒவ்வொருவருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் நம் உடலில் இருந்தாலும் நம்மில் எவ்வளவு பேருக்கு அதனை பேணி பாதுகாக்கும் முறையும் போதுமான விழிப்புணர்வும் உள்ளது?

ஒரு மனிதருக்கு ஒரு சிறுநீரகம் போதுமென்றாலும் அதனையும் காத்துக்கொள்ளும் பக்குவம் நம்மிடையே உள்ளதா? அதைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? சர்வதேச சிறுநீரக தினமான இன்று சில எளிய யோசனைகளை நம்மிடையே பகிர்ந்துகொள்கின்றனர் சில மருத்துவ நிபுணர்கள்.

இதுகுறித்து பேசிய மதுரை சிறுநீரக மையம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (எம்.எம்.எச்.ஆர்.சி) மருத்துவர்கள் கூறுகையில்,

மோசமான வாழ்க்கை முறை காரணமாக நாள்பட்ட சிறுநீரக நோயால் கண்டறியப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்தனர்.

சிறுநீரக தினம் முன்னிட்டு மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மையத்தின் நிறுவன இயக்குநரும் தலைமை சிறுநீரக நோயியல் நிபுணருமான டி.தினகரன் இதுகுறித்து கூறியதாவது:

'மோசமான வாழ்க்கை முறையே இளைஞர்களிடையே நாள்பட்ட சிறுநீரக நோய்கள் அதிகரிக்கக் காரணம்.

நீண்டகால சிறுநீரக நோய் எந்தவொரு பெரிய அறிகுறிகளும் இல்லாமலேயே தனிநபர்களிடம் மெதுவாக வந்து ஆதிகக்கம் செலுத்தும். இதன்பின்னர் மாற்று அறுவை சிகிச்சையின்மூலம் பிரச்சினையின்றி வாழலாம். ஆனால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியாத நிலையும் ஏற்படலாம். அப்போது நோயாளிகள் டயாலிசிஸில் செய்துகொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

மருத்துவத் துறையில் குறிப்பிடப்படும் பெரிட்டோனியல் டயாலிசிஸ் (பி.டி) என்பது ஒரு வீட்டு அடிப்படையிலான செயல்முறை ஆகும். சிறுநீரக நோய் கண்ட நோயாளிகளுக்கு எளிமையான முறையில் பின்பற்றி சிகிச்சை பெற இது உதவும். டயலீசேட் எனப்படும் சுத்திகரிப்பு திரவத்தின் உதவியுடன் உடலில் இருந்து கழிவுகளை ஒரு வடிகுழாய் வழியாக வயிற்றின் புறணிக்குள் செலுத்துவது போன்ற செயல்முறைகள் இதில் அடங்கும்.

இதன்மூலம் குழாய் வழியாக, திரவம் மாறி மாறி அடிவயிற்றின் உள்ளேயும் வெளியேயும் கழுவப்பட்டு அசுத்தங்களை வெளியேற்றலாம். இதனால், டயாலிசிஸின் இந்த வடிவத்தில், உடலில் இருந்து இரத்தம் வெளியேற்றப்படுவதில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இது சரியான பயிற்சியின் பின்னர் நோயாளி அல்லது குடும்ப உறுப்பினரால் டயாலிசிஸ் செய்யப்படலாம். இதில் குறைந்த அளவிலான சிக்கல்கள் உண்டு. எனினும் கவனமாக செயல்பட்டால் நல்ல மாற்றங்களைப் பெறமுடியும்.

மனதில் கொள்ள வேண்டிய ஒரே அம்சம் என்னவென்றால், போதுமான சுகாதாரம் பராமரிக்கப்பட வேண்டும் என்பதுதான்.

தொற்றுநோய்க்கான அபாயத்தை முடிந்தவரை குறைக்க முழுமையாக கை கழுவி தூய்மை செய்துகொள்ளும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மதுரை சிறுநீரக மையத்தின் நிறுவன இயக்குநரும் தலைமை நெப்ராலஜிஸ்ட்டுமான டி.தினகரன் தெரிவித்தார்.

மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் நெப்ராலஜிஸ்ட் கே.சம்பத்குமார் கூறுகையில், ''நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் சிகிச்சை மென்மையாகவும், பயனுள்ளதாகவும், நோயாளிக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வாழ்க்கைத் தரத்தை அளிக்கும் வகையிலும் இருக்க வேண்டும்.

டயாலிசிஸின் சிக்கலான நடைமுறைகளை நோயாளிகளுக்கு எளிதாக்கும் ஆற்றல் பி.டி.க்கு உள்ளது. நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு வழக்குகள் அதிகரித்து வருவதற்கு தேசிய டயாலிசிஸ் திட்டத்தில் (பி.எம்.என்.டி.பி) பி.டி.யை சேர்க்க வேண்டிய அவசியம் இருந்தது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x