கரோனா: தமிழகத்தில் பரிசோதனை செய்த 8 பேருக்கும் நெகட்டிவ்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

அமைச்சர் விஜயபாஸ்கர்: கோப்புப்படம்
அமைச்சர் விஜயபாஸ்கர்: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகத்தில் 8 பேருக்குக் கரோனா வைரஸ் பரிசோதனை செய்ததில், அவர்கள் அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது என, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,136 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியது. இவருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 70 பேரின் ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவருக்கு மட்டும் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. 61 பேருக்கு பாதிப்பு இல்லை.

மீதம் 8 பேரின் பரிசோதனை முடிவுகள் குறித்து இன்று (மார்ச் 10) அமைச்சர் விஜயபாஸ்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்ததாவது:

"மகிழ்ச்சியான செய்தி ஒன்றைச் சொல்கிறேன். கரோனா வைரஸ் இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்ட 8 பேரின் முடிவுகளும் 'நெகட்டிவ்' என்று வந்திருக்கிறது. இதில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த 7 பேரின் பரிசோதனை முடிவுகளும் அடக்கம். இதனால், தமிழகத்தில் புதியதாக கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடுமையான பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றன".

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in