Published : 06 Mar 2020 09:37 AM
Last Updated : 06 Mar 2020 09:37 AM

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 7 மாவட்டங்களில் வழக்கமான வெப்பநிலையை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய பிரதேச மாநிலம் முதல் தமிழகத்தின் உள்பகுதி வரை காற்று சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்தசில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 9 செமீ, இரணியலில் 5 செமீ, மயிலாடியில் 3 செமீ, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் 2 செமீ,தளி, தென்காசி ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

மேலும், மதுரை, திண்டுக்கல், சேலம், நாகமக்கல், கரூர், திருச்சி,பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.

நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவுகளின்படி, மதுரை விமான நிலையத்தில் 100 டிகிரி, மதுரை தெற்கில் 99 டிகிரி, கரூர் பரமத்தி, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் 98 டிகிரி, கோவை, தருமபுரி, பாளையங்கோட்டை, வேலூர் ஆகிய இடங்களில் தலா 95 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. மதுரை, திண்டுக்கல், சேலம், நாகமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x