Published : 27 Feb 2020 09:26 PM
Last Updated : 27 Feb 2020 09:26 PM
நீலகிரி மாவட்டம் உதகையில் சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள பூமாலை வளாகத்தில் திருநங்கைகள் நடத்தும் முதல் ஆவின் பாலகம் இன்று திறக்கப்பட்டது. ஆவின் பொருட்களின் விற்பனையை ஆவின் நிர்வாக இயக்குநர் எம்.வள்ளலார் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் அவர் கூறியதாவது:
''நீலகிரி மாவட்ட ஆட்சியரின் முயற்சியில் திருநங்கைகள் குழு நடத்தும் தமிழகத்தின் முதல் ஆவின் பாலகம் உதகையில் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலகத்தை நீலகிரி சுய உதவிக்குழு என்ற குழுவில் உள்ள 5 திருநங்கைகள் நடத்துகின்றனர். இந்தப் பாலகம் சிறப்பாகச் செயல்பட்டால் தமிழகம் முழுவதும் இத்தகைய பாலகங்கள் விரிவுபடுத்தப்படும்.
திருநங்கைகள் போன்ற சமூகத்தில் பின்தங்கிய மக்கள் வாழ்வாதாரம் பெரும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் மாடுகள் வளர்க்க வாய்ப்பிருந்தால், பால் உற்பத்தியைப் பெருக்க மாடுகள் வாங்க கடனுதவி செய்து கொடுக்கப்படும். ஆவின் நிறுவனம் 1980-ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து இதுநாள் வரையில், அதிகபட்சமான விற்பனை இலக்கை எட்டியுள்ளது. அது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
ஆவின் பொருட்கள் தூய்மையானவை, தரமானவை. மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. இதனால், புதிய பொருட்களை அறிமுகம் செய்துள்ளோம். நீலகிரி மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலம் மில்மா நிறுவனத்துக்கு நாள் ஒன்றுக்கு 1.5 லட்சம் லிட்டர் அனுப்புகிறோம். கேரளா, பாண்டிசேரி, தெலங்கானா மாநிலங்களில் ஆவின் பொருட்கள் விற்பனையைத் தொடங்கவுள்ளோம்.
நீலகிரி மாவட்டத்திலிருந்து மாதந்தோறும் கோட்டக்கல் வைத்தியசாலைக்கு 3000 கிலோ நெய் மற்றும் 1.5 டன் பால் அனுப்பப்படுகிறது. மேலும், சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளுக்கு ஆவின் நெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது நமது தேவையை விட அதிகமாக உள்ளது. இதனால், விற்பனையையும் அதிகரித்து வருகிறோம்.
தமிழக முதல்வர், விவசாயிகளிடமிருந்து தகுந்த விலையில் பால் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், கடனுதவி அளித்து மாடுகளை பெருக்கி, பால் உற்பத்தியை பெருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
கால்நடைகளுக்குத் தேவையான தீவனம் அதிகரிக்க அரசு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 12,500 சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. சில சங்கங்கள் செயல்படாமல் உள்ளன. இவற்றை மீண்டும் செயல்படுத்த பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளன''.
இவ்வாறு ஆவின் நிர்வாக இயக்குநர் வள்ளலார் பேசினார்.
நீலகிரி சுய உதவிக்குழு தலைவர் செளம்யா கூறும் போது, ''திருநங்கைகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட ஆட்சியரின் இந்த முயற்சியால் திருநங்கைகளான எங்கள் நிலை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் உயரும். எங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இருந்தால், விற்பனை அதிகரித்து, எங்களைப் போன்ற பல திருங்கைகளுக்கு இத்தகைய வாய்ப்புகள் கிடைக்கும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment