Last Updated : 26 Feb, 2020 03:48 PM

 

Published : 26 Feb 2020 03:48 PM
Last Updated : 26 Feb 2020 03:48 PM

திருச்செந்தூர் மாசித் திருவிழா நாளை மறுநாள் தொடக்கம்: ஏப்ரல் 8-ல் தேரோட்டம்

தூத்துக்குடி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம் நாளை மறுநாள் (பிப்.28) நடைபெறுகிறது. தேரோட்டம் ஏப்ரல் 8-ம் தேதி நடைபெறுகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் மாசித் திருவிழாவும் ஒன்றாகும்.

இந்த ஆண்டுக்கான மாசித் திருவிழா நாளை மறுநாள் (பிப்.28) வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது.

தொடர்ந்து காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோயில் செப்பு கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 3-ம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோயிலில் இரவு 7.30 மணியளவில் குடவருவாயில் தீபாராதனை நடைபெறுகிறது.

ஏப்ரல் 5-ம் தேதி ஏழாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தொடர்ந்து காலை 8.30 மணிக்குள் ஆறுமுகப்பெருமான் வெற்றி வோ் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேருகிறார்.

அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

ஏபர்ல 6-ம் தேதி எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலை சுவாமி பெரிய வௌ்ளிச்சப்பரத்தில் வௌ்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் வந்து, அங்கு வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு மேல் சுவாமி பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து கோயில் சேருகிறார்.

ஏப்ரல் 8-ம் தேதி பத்தாம் திருவிழா அன்று திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் ரதவீதியில் வலம் வந்து அருள் பாலிக்கும் தேரோட்டம் நடைபெறுகிறது. ஏப்ரல் 9-ம் தேதி பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு 10.30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. ஏப்ரல் 10-ம் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

தாம்பூலம் பெறுதல்:

மாசித் திருவிழாவை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பில் சிவாச்சாரியார்களுக்கு தாம்பூலம் கொடுத்து அழைப்பது பாரம்பரிய பழக்கம். இந்த நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

கோயில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் சா.ப.அம்ரித் திருவிழா பட்டோலை (அழைப்பு) வைக்கப்பட்ட தாம்பூலத்தை கொடுக்க, அதனை காப்புக்கட்டிய சிவாச்சாரியார் சி.சின்னசுப்பிரமணிய அய்யர் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x