Last Updated : 12 Feb, 2020 11:18 AM

 

Published : 12 Feb 2020 11:18 AM
Last Updated : 12 Feb 2020 11:18 AM

2 மாவட்டங்களின் கீழ் கொண்டு வரப்பட்டதால் குழப்பத்தில் திருச்சி மாநகர திமுக நிர்வாகிகள்

கோப்புப் படம்

திருச்சி

திருச்சி மாநகர திமுகவின் பகுதிகள் தெற்கு, மத்திய என 2 மாவட்டங்களின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால், மாநகர திமுக நிர்வாகிகள் குழப்ப நிலையில் உள்ளனர்.

ஒருங்கிணைந்த திருச்சி மாவட் டமாக இருந்த காலத்திலிருந்தே மாவட்ட திமுகவின் கீழ் திருச்சி நகரத்துக்கென தனியாக நிர்வா கிகள் நியமிக்கப்பட்டு வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாவட்டத்தை தெற்கு, வடக்கு என இரண்டாக பிரித்தபோது திருச்சி மாநகரம் தெற்கு மாவட்ட திமுகவின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. மாநகரச் செயலாளராக மு.அன்பழகன், அவைத் தலைவராக அப்துல் சலாம், பொருளாளராக ராமலிங்கம் உள்ளிட்டோர் நிர்வாகிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த கே.என்.நேரு, கட்சியின் முதன்மைச் செயலாளராக நியமிக் கப்பட்டார். இதையடுத்து நிர்வாக வசதிக்காக திருச்சியை வடக்கு, மத்திய, தெற்கு என 3 மாவட்டங் களாக பிரித்து திமுக தலைமை அறிவித்தது. இதில் முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகள் வடக்கு மாவட்டத்திலும், திருச்சி மேற்கு, ரங்கம், லால்குடி ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகள் மத்திய மாவட்டத்திலும், திருவெ றும்பூர், மணப்பாறை, திருச்சி கிழக்கு ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகள் தெற்கு மாவட்டத்திலும் கொண்டு வரப்பட்டன.

ஏற்கெனவே திருச்சி தெற்கு மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் மட்டும் இருந்த திருச்சி மாநகர திமுக, தற்போதைய புதிய அறிவிப்பின்படி தெற்கு, மத்திய என 2 மாவட்டங்களின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் மாநகர திமுக நிர்வாகிகள் அனைவரும், இனி 2 மாவட்டச் செயலாளர்களின் கீழ் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக நிர்வாகி களிடம் விசாரித்தபோது, ‘‘உள்ளாட்சி பதவிகளுக்கு ஏற்றார்போலவே திமுகவிலும் கட்சியின் அமைப்புகள் இருந்தன. தற்போது, அவற்றை மாற்றி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏற்ப வடிவமைப்பதால் இது போன்ற குழப்பங்கள் எழுகின்றன. திருச்சி மாவட்ட திமுகவை 3 ஆக பிரித்த போது, மாநகரிலுள்ள பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கிய தொகுதிகளை ஏதாவது ஒரே மாவட்டத்தின்கீழ் வைத்திருந்தால் இக்குழப்பம் ஏற்பட்டிருக்காது. ஆனால் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தாங்கள் விரும்பிய தொகுதிகள் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் பார்த்துக் கொண்டதால், மாநகர திமுகவின் பகுதிகளும் இரண்டாக பிளவுபட்டு நிற்கின்றன. 2 மாவட்டச் செயலாளர்களின் கீழ் பணியாற்ற வேண்டியுள்ளதால், நிர்வாகிகளுக்கு சில குழப்பங் களும் சங்கடங்களும் ஏற்படுவது உண்மைதான்.

இனிவரும் காலத்தில் திருச்சி மாநகர திமுக இப்படியே தொடர்ந்து நீடிக்குமா அல்லது முற்றி லுமாக கலைக்கப்பட்டு பகுதி, வட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரடியாக அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்ப டுவார்களா அல்லது அந்தந்த மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கி தெற்கு, மத்திய என இரண்டிலும் தனித்தனி மாநகர திமுகவை உருவாக்கி நிர்வாகிகளை நியமிப் பார்களா என்பது போன்ற குழப் பங்கள் உள்ளன. வரும் 21-ம் தேதி திமுக உட்கட்சித் தேர்தல் தொடங்கும்போது, இக்குழப்பத் துக்கு தீர்வு கிடைக்கலாம்” என்றனர்.

அதிருப்தியில் அன்பழகன்..!

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சி மாநகர திமுக செயலாளராக இருப்பவர் மு.அன்பழகன். முன்னாள் துணை மேயரான இவர் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளர். கட்சியில் புதிதாக மாவட்டம் பிரிக்கப்பட்டபோது மத்திய மாவட்டத்தின் பொறுப்பாளராக இவர் நியமிக்கப்படலாம் என பரவலாக பேச்சு இருந்தது. ஆனால், அவருக்கு அப்பதவி கிடைக்கவில்லை. இதனால் அன்பழகன் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறும்போது, “மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் அன்பழகன் அதிருப்தியில் இருப்பது உண்மை. கே.என்.நேரு அவரை சமாதானம் செய்யும் நோக்கில் மு.க.ஸ்டாலினிடம் அழைத்துச் சென்றார். அப்போது, கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்த அன்பழகனிடம், வரும்காலத்தில் நிச்சயம் பொறுப்பு தரப்படும் கூறி மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார். அந்த நம்பிக்கையில் அன்பழகன் தற்போது கே.என்.நேருவிடம் மட்டுமின்றி, தெற்கு மாவட்ட பொறுப்பாளரான மகேஷ் பொய்யாமொழி பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கும் சென்று வருகிறார்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x