Published : 03 Jan 2020 09:54 AM
Last Updated : 03 Jan 2020 09:54 AM

3 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே ஆண்டில் ராகு- கேது, குரு, சனிப் பெயர்ச்சிகள்

கரூர்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஆண்டில்(2020-ல்) ராகு- கேது, குரு, சனிப் பெயர்ச்சிகள் நடைபெற உள்ளன.

சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, ராகு, கேது, சனி ஆகிய கிரகங்கள் நவக்கிரகங்கள் எனப்படுகின்றன. நவக்கிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயரும்போது, ஒவ்வொரு ராசியினருக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் ஏற்படும்.

சந்திரன் இரண்டே கால் நாள், புதன், சூரியன் தலா 1 மாதம், சுக்கிரன் ஒன்றரை மாதம், செவ்வாய் 1 மாதம் முதல் 6 மாதங்கள் வரையிலான காலகட் டத்தில் இடம் பெயரும். குரு ஓராண்டு, ராகு- கேது ஒன்றரை ஆண்டு, சனி இரண்டரை ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை என ஒவ்வொரு கோளும் ஒரு ராசியில் சஞ்சரிக்க எடுத்துக்கொள்ளும் காலம் வேறுபடும்.

இவற்றில் குரு, ராகு, கேது, சனிப் பெயர்ச்சிகள் நடைபெறும்போது கோயில்களின் சிறப்பு பூஜைகள் மற்றும் பாதிப்பு உள்ள ராசியினருக்கு பரிகார பூஜைகள் செய்யப்படும்.

குரு ஆண்டுதோறும் இடம் பெயர்வதால் பெரும்பாலான ஆண்டுகளில் குருப் பெயர்ச்சி ஏற்படும். ராகு- கேது பெயர்ச்சி ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவதால் ஒரு சில ஆண்டுகளில் ராகு- கேது பெயர்ச்சி இருக்காது. அதேபோல, சனிப் பெயர்ச்சி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படுவதால் ஒன்று அல்லது 2 ஆண்டுகளுக்கு சனிப் பெயர்ச்சி இருக்காது.

கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு 3 ஆண்டுகள் கழித்து ஒரே ஆண்டில்(2020-ல்) குரு, ராகு, கேது, சனிப் பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன.

வாக்கிய பஞ்சாங்கப்படி 2020-ம் ஆண்டு செப்.1-ம் தேதி ராகு- கேது பெயர்ச்சி, நவ.15-ம் தேதி குருப் பெயர்ச்சி, டிச.27-ம் தேதி சனிப் பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதற்கு முன் 2014, 2017-ம் ஆண்டுகளில் ஒரேயாண்டில் 4 கிரகங்களின் பெயர்ச்சி நடை பெற்றது.

இதுகுறித்து ஜோதிடர் ஆர்.கிருஷ்ணராஜ் கூறியபோது, “சனி இரண்டரை ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சியாவதால் எல்லா ஆண்டுகளிலும் எல்லா கிரகப் பெயர்ச்சிகளும் நடைபெறுவதில்லை. நிகழாண்டு ராகு- கேது, குரு, சனிப் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது.

கிரகப் பெயர்ச்சிகளில் வாக்கியம், திருக்கணிதம் என இரு வகை பஞ்சாங்க முறைகள் பின்பற்றப்படுகின்றன. கோயில் களில் வாக்கிய பஞ்சாங்க முறை பின்பற்றப்படுவதால் அதன்படி பெயர்ச்சி நடைபெறும் காலங்களில் கோயில்களில் சிறப்பு பூஜைகள், பரிகாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x