Published : 29 Dec 2019 08:10 AM
Last Updated : 29 Dec 2019 08:10 AM

சிறுமி கொலையில் ஒருவருக்கு தூக்கு; மற்றொரு நபருக்கு டிஎன்ஏ பரிசோதனை: காவல்துறை விசாரணை தீவிரம்

கோவை அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், ஒருவருக்கு நேற்று முன்தினம்தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில், சந்தேகத்துக்குரிய மற்றொரு நபரின் ரத்த மாதிரியை சேகரித்து டிஎன்ஏ பரிசோதனை செய்ய காவல்துறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த பன்னிமடை கஸ்தூரி நாயக்கன்புதூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 7 வயது மகள், கடந்தமார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, தொண்டாமுத்தூரை சேர்ந்தசந்தோஷ்குமார் (32) கைது செய்யப்பட்டார். கொலை, போக்சோ, தடயங்களை மறைத்தல் ஆகிய 3 பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. சந்தோஷ்குமாருக்கு போக்சோ நீதிமன்றம் நேற்று முன்தினம் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இந்த வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக சிறுமியின் பெற்றோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, பெண் அதிகாரியை நியமித்து விசாரிக்க மாவட்ட காவல்துறைக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதுதொடர்பான அடுத்தகட்டப் பணிகள் தொடர்பாக மாவட்ட காவல்துறையினர் கூறும்போது, ‘‘இந்த வழக்கு தொடர்பாக துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மீனாம்பிகை தலைமையில் மீண்டும் விசாரணைநடத்தப்படும். அப்பகுதியைச் சேர்ந்த சந்தேகத்துக்குரிய ஒருவரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, டிஎன்ஏ பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்படும். சந்தேகம் உறுதியானால் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x