Last Updated : 28 Dec, 2019 04:36 PM

 

Published : 28 Dec 2019 04:36 PM
Last Updated : 28 Dec 2019 04:36 PM

நெல்லை மாவட்டத்தின் மிக முக்கிய நீராதாரம்: 3 ஆண்டுகளுக்குப்பின் நிரம்பி வழியும் மானூர் பெரியகுளம்- 4 ஆயிரம் ஏக்கரில் நெல் விவசாயத்துக்கு வாய்ப்பு

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தின் மிகப்பெரிய நீராதாரமான மானூர் பெரியகுளம் 3 ஆண்டுகளுக்குப்பின் நிரம்பி வழிகிறது.

இதனால் 4 ஆயிரம் ஏக்கரில் நெல் விவசாயத்துக்கு வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இந்த குளத்தை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இன்று பார்வையிட்டார்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மிகப்பெரிய குளங்களில் ஒன்றான மானூர் பெரியகுளம் 1120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஓர் அணைக்கட்டுக்கு சமமானது. 180 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.

இந்த குளம் மூலம் மானூர், மாவடி, மதவக்குறிச்சி, எட்டான்குளம் ஆகிய 4 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 30 கிராமங்களில் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த குளம் நிரம்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, சுற்றியுள்ள 30 கிராமங்களில் விவசாயம் செழிக்கும்.

மானூர் குளத்துக்கு முன்பாக உள்ள 19 குளங்கள் நிரம்பிய பின்னரே தண்ணீர் மானூர் பெரியகுளத்துக்கு வரும். ஆனால், அதற்குள் பருவமழை முடித்து விடுவதும் உண்டு. இந்த குளம் நிரம்பும்போதெல்லாம் இப்பகுதி விவசாயிகள் பிசானம், முன்கார் ஆகிய இருபருவ சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்.

இந்த குளம் கடந்த 2006, 2011, 2015, 2016-ம் ஆண்டுகளில் நிரம்பி வழிந்திருந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்குமுன் நீடித்த மழையால் இந்த குளம் மீண்டும் நிரம்பி மறுகால் பாய்கிறது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த குளம் நிரம்பும்போதெல்லாம் இப்பகுதி விவசாயிகள் பிசானம், முன்கார் ஆகிய இருபருவ சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். தற்போது பிசான சாகுபடி பணிகளில் இப்பகுதி விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

சிற்றாறு பாசனத்துக்கு உட்பட்ட இந்த குளத்துக்கு 33 கி.மீ. தூரமுள்ள சிற்றாறு கால்வாய் மூலம் குற்றாலம் பகுதியிலிருந்து தண்ணீர் வந்து சேருகிறது. இந்த கால்வாயில் பல்வேறு இடங்களில் குப்பைகளை கொட்டியிருந்தது, ஆங்காங்கே மணல்மேடிட்டு காணப்பட்டது குறித்தெல்லாம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு இப்பகுதி விவசாயிகள் இவ்வாண்டு தொடக்கத்திலேயே கொண்டுவந்திருந்தனர்.

அதன்பயனாக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மையமும், தன்னார்வ அமைப்புகளும் இணைந்து கால்வாயை தூர்வாரி செப்பனிடும் பணிகளை கடந்த மே மாதத்தில் தொடங்கி செயல்படுத்தின. குற்றாலம் பகுதியிலிருந்து சிற்றாறு கால்வாய் 33 கி.மீ. தூரத்துக்கு தூர்வாரப்பட்டதை அடுத்து சமீபத்திய பருவமழையின்போது தண்ணீர் தங்குதடையின்றி குளத்துக்கு வந்துசேர்ந்தது. இதனால் குளம் தற்போது நிரம்பி வழிகிறது.

இந்த குளத்துக்கு வரும் கால்வாய் ஆக்கிரமிப்புகளாலும், கால்வாய் மராமத்து செய்யப்படாமல் இருந்ததாலும் பல ஆண்டுகளாக குளம் வறண்டு கிடந்தது. அண்ணா பல்கலைக்கழக திருநெல்வேலி மண்டல மைய புலமுதல்வர் அப்போது பொறுப்பு வகித்த ஜி. சக்திநாதன் முயற்சியில் கால்வாய் பகுதி தூர்வாரப்பட்டதை அடுத்து கடந்த 2015, 2016-ம் ஆண்டுகளில் குளத்துக்கு தண்ணீர் தங்குதடையின்றி வந்து சேர்ந்திருந்தது.

அதன்பின் குளம் நிரம்பும் அளவுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. மீண்டும் இவ்வாண்டும் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டதால் தற்போது தண்ணீர் பெருகி நிரம்பி வழிகிறது. இதனால் 4 ஆயிரம் ஏக்கருக்குமேல் பாசன வசதி பெறும் என்று என்று இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனிடையே இந்த குளத்தை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சக்திநாதன் மற்றும் அதிகாரிகள் இன்று பார்வையிட்டனர். குளத்திலுள்ள தண்ணீரில் பூக்களை தூவி ஆட்சியர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருக்கு விவசாயிகள் நன்றி கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x