Published : 19 Dec 2019 08:32 AM
Last Updated : 19 Dec 2019 08:32 AM

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான முறைகேடு புகாரில் முகாந்திரம் இருந்தால்தான் வழக்கு பதிவு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

எஸ்.பி.வேலுமணி

சென்னை

‘அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான முறைகேடு புகார் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்படும்’ என தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் மற்றும் திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘‘சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டரில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. அமைச்சர் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்கு ஒப்பந்தப் பணிகளை வழங்கியுள்ளதால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக லஞ்சஒழிப்புத் துறை எஸ்பி பொன்னி விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் மேற்பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தர விட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆகியோர் ஆஜராகி லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்தனர்.

மேலும் அவர்கள் தங்களது வாதத்தில், ‘‘இந்த புகார் மீதான லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அரசில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது உள்நோக்கத்தோடும் பொய்யாகவும் புகார்கள் அளிக்க வாய்ப்புள்ளது. ஆகவேதான், அந்த புகார்களின் உண்மைத்தன்மையை அறிய ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு, அந்த விசாரணையில் முகாந்திரம் இருந்தால் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்படும்" என வாதிட்டனர்.

பதிலுக்கு திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ‘‘பொதுவாக அமைச்சர்கள் மற்றும் முதல்வருக்கு எதிரான புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஆளுநரிடம்தான் அனுமதி பெற வேண்டும். ஆனால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார் தொடர்பாக தலைமைச் செயலரிடம் அனுமதி பெற்றுள்ளனர். முதற்கட்ட விசாரணையை வேண்டுமென்றே தாமதப்படுத்தி, அதன்பிறகு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவிப்பதே அரசின் நோக்கமாக உள்ளது" என வாதிட்டார்.

பின்னர், நீதிபதிகள் கூறும்போது, ‘‘ஆரம்பகட்ட விசாரணை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தப்படுகிறதா அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை விதிகளின்படி நடத்தப்படுகிறதா’’ என கேள்வி எழுப்பியதுடன், விசாரணையை ஜன.7-க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x