Published : 11 Dec 2019 10:48 AM
Last Updated : 11 Dec 2019 10:48 AM

தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வில் வெளிப்படையாக ஒரு மோசடி: வைகோ குற்றச்சாட்டு

வைகோ: கோப்புப்படம்

சென்னை

தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வில் கலந்துகொள்பவர்களின் மதிப்பெண்களை பென்சிலால் மட்டுமே எழுத வேண்டும் என, தேர்வு ஆணைய உறுப்பினர்களுக்கு தமிழக அரசு, அறிவுறுத்தி இருப்பதாக அறிகின்றேன். இது வெளிப்படையான மோசடி என்று மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (டிச.11) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி-1 பணிகளுக்கான முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுடைய பட்டியலை வெளியிட்டு இருக்கின்றது. துணை ஆட்சியர்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் பொறுப்புக்காக நடைபெறுகின்ற இந்தத் தேர்விற்கான நேர்காணல், வருகின்ற டிசம்பர் 23 ஆம் தேதி முதல் நடைபெறுகின்றது.

அதில் கலந்து கொள்பவர்களுடைய மதிப்பெண்களை, பேனாவால் எழுதக்கூடாது; கண்டிப்பாகப் பென்சிலால் மட்டுமே எழுத வேண்டும் என, தேர்வு ஆணைய உறுப்பினர்களுக்கு தமிழக அரசு, அறிவுறுத்தி இருப்பதாக அறிகின்றேன். மதிப்பெண்களைத் திருத்தி, தங்களுக்கு வேண்டியவர்களைத் தேர்வு செய்வதற்காக, இத்தகைய ஏற்பாடு நடைபெற்று வருகின்றது.

இந்த 21 ஆம் நூற்றாண்டில், கணினிகளின் காலத்தில், வெளிப்படையாக ஒரு மோசடி நடைபெற இருக்கின்றது. அதையும், தமிழக அரசே நடத்தப் போகின்றது என்பது மிகவும் வேதனைக்கு உரியது. கிராமப்புறங்களைச் சேர்ந்த, ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த, எந்தப் பின்புலமும் இல்லாத, தகுதி வாய்ந்த இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்ற இந்தக் கொடுமை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

மதிப்பெண்களைக் கணினியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அனைத்து நேர்காணல்களையும், காணொலிப் பதிவு செய்ய வேண்டும்" என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x