Published : 01 Dec 2019 08:48 AM
Last Updated : 01 Dec 2019 08:48 AM

உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து முதலிடம்; தமிழகத்துக்கு 5-வது முறையாக தேசிய விருது: டெல்லி விழாவில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பெற்றுக்கொண்டார்

டெல்லியில் நேற்று நடைபெற்ற உடல் உறுப்பு தான விழாவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 5-வது முறையாக முதலிடம் பெற்றமைக்கான விருது உள்ளிட்ட மூன்று தேசிய அளவிலான விருதுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே ஆகியோர் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் வழங்கினர். உடன் துறை செயலாளர் பீலா ராஜேஷ்.

சென்னை

உடல் உறுப்பு தானத்தில் முதன்மையான மாநிலத்துக்கான விருதை தமிழகம் தொடர்ந்து 5-வது முறையாக பெற்றுள்ளது. டெல்லியில் நேற்று நடந்த விழாவில் இந்த விருதை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பெற்றுக்கொண்டார்.

டெல்லியில் 10-வது ஆண்டு உடல் உறுப்பு தான நாள் விழா நேற்று நடந்தது. இதில், உறுப்பு தானத்தில் முதன்மை மாநிலத்துக்கான விருது தமிழ கத்துக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே ஆகியோர் வழங்க, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார்.

உடல் உறுப்பு தானத்தில் மிகச் சிறப்பாக செயல்படும் மருத்துவ மனையாக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு விருது வழங்கப்பட்டது. மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து கைகளை தானமாக பெற்று, திண்டுக்கல்லை சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு பொருத்தி நாட்டிலேயே முதல் முறையாக கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்த சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர் ரமாதேவிக்கும் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர் சி.விஜய பாஸ்கர் பேசியதாவது: அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஏழை, எளியவர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இலவச மாக செய்யப்படுகிறது. இந்த சிகிச்சைகளுக்கு தமிழகத்தில் மட்டும்தான் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ரூ.22 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

சென்னையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணை யம் சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற் காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒரே இடத்தில் 80 நிமிட தொடர் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி கின்னஸ் உலக சாதனை யாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, உடல் உறுப்பு தானம் குறித்த மாபெரும் விழிப் புணர்வு மாரத்தான் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. சென்னை பெசன்ட் நகரில் நடந்த மாரத்தானில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த மாரத்தானில் 12,853 பேரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதுபோன்ற செயல்பாடுகள் மூலம் உறுப்பு தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக தொடர்ந்து திகழ்கிறது. இதன்வாயிலாக உடல் உறுப்பு தானத்தை மக்கள் இயக்கமாகவே தமிழகம் மாற்றி வருகிறது. இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.

‘புதிய’ கைகளால் குத்துவிளக்கு

விழாவில், நாட்டிலேயே முதல் முறையாக கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட திண்டுக்கல் நாராயணசாமி தனக்கு புதிதாக பொருத்தப்பட்ட கைகளால் குத்துவிளக்கேற்றியது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் மத்திய சுகாதார, குடும்பநலத் துறை செயலாளர் (பொறுப்பு) அருண்குமார் பாண்டா, கூடுதல் செயலாளர் அருண் சிங்கால், மத்திய சுகாதாரப் பணிகள் தலைமை இயக்குநர் சஞ்சய் தியாகி, தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், தேசிய உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று நிறுவனத்தின் (நோட்டோ) இயக்குநர் வசந்தி ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x