Published : 17 Nov 2019 11:55 AM
Last Updated : 17 Nov 2019 11:55 AM

மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியில் நேற்று நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரி உற்சவத்தில் கலந்துகொண்டு புனித நீராடிய பக்தர்கள்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடு துறை துலாக் கட்ட காவிரியில் நேற்று நடைபெற்ற கடைமுக தீர்த்த வாரி உற்சவத்தில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவி சாப விமோசனம் பெற மயில் உருவத்தில் மயிலாடு துறையில் சிவபெருமானை பூஜித் தார். சிவபெருமானும் மயில் உரு வம் எடுத்த நிலையில் இருவரும் ஆனந்த நடனம், மாயூரத்தாண்ட வம் ஆடினர். அப்போது சிவ மயில், தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த பிரம்மதீர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிக்கு மாறு கூறியதையடுத்து, பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து மயில் உருவம் நீங்கப்பெற்று தேவியாக சுய உருவம் பெற்றார். கங்கை, யமுனை உட்பட அனைத்து புண்ணிய நதிகளும் மயிலாடுதுறை துலாக் கட்டக் காவிரியில் புனித நீராடி பாவங்களை தொலைத்ததாக ஐதீகம். பார்வதி தேவி சிவனை வழிபட்ட இந்த துலா மாதத்தில் மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியில் வந்து நீராடுபவர்களின் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

இத்தகைய சிறப்பு பெற்ற மயி லாடுதுறையில் கடந்த அக்.18-ம் தேதி துலா உற்சவ தொடக்க நிகழ் வான தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து அக்.27-ம் தேதி அமா வாசை தீர்த்தவாரி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, கடந்த நவ.7-ம் தேதி கொடியேற்றத்துடன் 10 நாள் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் தொடங்கியது. கடந்த நவ.13-ம் தேதி திருக்கல்யாணம், நேற்று முன்தினம் (நவ.15) தேரோட்டம் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக நேற்று கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

விழாவில், திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநா தர், அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர், தருமபுரம் ஆதீனத் துக்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் உற்சவர்கள் காவிரியின் இருகரை களிலும் எழுந்தருளினர்.

தெற்குக் கரையில் திருவாவடு துறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையிலும், வடக்குக் கரையில் தருமபுரம் ஆதீனம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் சுவாமிகள் முன்னிலையிலும் காவிரி துலாக் கட்டத்தில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மதியம் 2.45 மணியளவில் சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றவுடன் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

விழாவில், திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை அம்பலவாண தம்பிரான், சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார், மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x