Published : 13 Nov 2019 09:13 AM
Last Updated : 13 Nov 2019 09:13 AM

16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு

கோப்புப்படம்

சென்னை

தமிழகத்தில் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்டது.

இதுகுறித்து தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

டிஎன்பிஎஸ்சி குரூப் 4-ல் அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 491 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு செப்.1-ம் தேதி நடைபெற்றது. 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 விண்ணப்பதாரர்கள், 301 தாலுகாக்களில் உள்ள 5 ஆயிரத்து 575 தேர்வு மையங்களில் இத்தேர்வை எழுதினர். இத்தேர்வின் முடிவுநேற்று (நவ.12) வெளியிடப்பட்டது.

விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தங்கள் தரவரிசை மற்றும் அவர்கள் பெற்ற மதிப்பெண்களை, ஆணையத்தின் ‘www.tnpsc.gov.inமற்றும் www.tnpscexams.in’ என்றஇணையதளத்தில், தங்கள் பதிவெண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்.

16 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் பங்கேற்ற இந்த தேர்வின் முடிவுகள், தேர்வு நடைபெற்ற நாளில் இருந்து 72 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளது. இது தேர்வாணைய வரலாற்றில் முதல் நிகழ்வாகும். இதற்கு முன் முடிவுகள் வெளியிட 105 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், தற்போது 72 நாட்களாக இது குறைக்கப்பட்டுள்ளது.

விரைவாக தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நாட்டிலேயே முன்னோடியாக திகழ்கிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தன்னுடைய ஒவ்வொரு செயல்பாட்டிலும் முற்றிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடவும் அவசியமான மாற்றங்களை படிப்படியாக செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x