Published : 12 Nov 2019 02:39 PM
Last Updated : 12 Nov 2019 02:39 PM

ரயில்வே திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை: டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதில் கடிதம்

டி.ஆர்.பாலு - பியூஷ் கோயல்

சென்னை

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் என, டி.ஆர்.பாலு எம்.பி.க்கு, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான டி.ஆர்.பாலு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்கள் குறித்து கோரிக்கை விடுத்தார்.

அதில், ''ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் கூடுவாஞ்சேரி அகல ரயில் பாதை திட்டம், அம்பத்தூர் புதிய ரயில் முனையம், மீனம்பாக்கம் - திரிசூலம் - சுரங்கப் பாதை திட்டம், ஆலந்தூர் - ஏஜிஎஸ் நிதி பள்ளியருகில் நடை மேம்பாலத் திட்டம் ஆகிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்’’ என்று டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.

இந்நிலையில், மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் கடிதத்திற்குப் பதிலளித்து அனுப்பியுள்ள ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஸ்ரீபெரும்புதூரில் ரயில்வே திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

டி.ஆர்.பாலுவுக்கு எழுதிய கடிதத்தில், ''லெவல் கிராசிங் 22 அருகில் திரிசூலம் முனையத்திற்கு சுரங்கப் பாதை திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்திட்டம் முன்னுரிமை அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும். கிண்டிக்கும் செயின்ட் தாமஸ் மவுண்டிற்கும் இடையில் உள்ள ஆலந்தூர் ஏஜிஎஸ் நிதி பள்ளியருகில் அமையவிருந்த பாதாள சாலை திட்டத்திற்குப் பதிலாக நடை மேம்பாலம் அமைக்க முடியுமா என்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது'' என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x