Published : 12 Jul 2015 11:15 AM
Last Updated : 12 Jul 2015 11:15 AM
வேப்பம்பட்டு அருகே 2 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டை அடுத்த கந்தன் கொல்லை அருகே, தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 5-ம் வகுப்பு வரை மட்டுமே உள்ள இந்தப் பள்ளியில் 300 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தற்போது நடைபெற்று வரும் கட்டுமான பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று பள்ளியின் இடைவேளை நேரத்தில் 4-ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் கழிவறைக்கு சென்றனர். இதை கவனித்த வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் கழிவறைக்கு சென்று மாணவிகளை கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதைக் கண்ட மற்ற மாணவிகள் சத்தம் போட்டனர்.
பள்ளி ஆசிரியர்கள் அங்கு விரைந்து வந்ததைக் கண்ட தொழிலாளர்கள் இருவரும் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், செவ்வாப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய 2 தொழிலாளர்களையும் தேடினர்.
இதையடுத்து, செவ்வாப் பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்த 2 பேரையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் கொல்கத்தா நந்தியா மாவட்டத்தைச் சேர்ந்த அல்லி சர்தார், சர்தார் இஸ்ரேல் என தெரிய வந்தது. போலீஸார், அவர்கள் இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT