Published : 16 Jul 2015 07:56 AM
Last Updated : 16 Jul 2015 07:56 AM

நீரிழிவு நோயைக் காரணம் காட்டி வேலை தர மறுக்க கூடாது: தெற்கு ரயில்வேக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நீரிழிவு நோயைக் காரணம் காட்டி வேலை தர மறுக்கக்கூடாது என்று தெற்கு ரயில்வேக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு வேலை மறுக்கப்பட்ட பெண்ணுக்கு 8 வாரங்களுக்குள் வேலை தரவேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெற்கு ரெயில்வே மற்றும் ரயில் பெட்டி இணைப்புத் தொழிற் சாலையில் (ஐ.சி.எப்) குரூப் டி பணிகளில் உள்ள 3,698 காலி யிடங்களை நிரப்புவதற்காக 2007-ம் ஆண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணிக்காக 4.3 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.

தகுதியுள்ளவர்களாக தேர்ந் தெடுக்கப்பட்ட 2.95 லட்சம் பேர், முதல் கட்டமாக உடல் தகுதி தேர்வுக்கு அனுப்பப்பட்டனர். அதில், 34,927 பேர் தகுதி பெற்ற னர். இவர்களுக்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில், 6,367 பேர் தேர்வாகினர். 4,232 பேரிடம் சான்றி தழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் பி.புஷ்பம் என்ற பெண் உட்பட 58 பேர் பணி புரிவதற்கு மருத்துவ ரீதியாக தகுதியற்றவர்கள் என்று கூறி நிராகரிக்கப்பட்டனர்.

தனக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று புஷ்பம் கேட்டுக் கொண்ட தால், மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகும் அவர் பணியில் சேர்வதற்கு மருத்துவ ரீதியாக தகுதியற்றவர் என்று கூறப்பட்டது. இதை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் புஷ்பம் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவை விசாரித்த தீர்ப்பாயம், 12 வாரத்துக்குள் புஷ்பத்துக்கு பணி வழங்க 2014-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். இவ் வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், டி.மதி வாணன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவு: இதுபோன்ற வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், உலகத்தில் நீரழிவு நோயின் தலைநகராக இந்தியா இருக்கிறது என்றும், நீரிழிவு என்பது நோய் அல்ல. அது ஒரு குறைபாடுதான் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும்போது, “40 வயதான புஷ்பத்துக்கு நீண்டகாலமாக நீரழிவு நோய் இருப்பதால், அவரால் பணியைத் திறம்பட செய்ய இயலாது. அதனால்தான் அவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை” என்றார்.

மேலும், நீண்டகாலம் நீரிழிவு நோய் இருந்தால் அது, உடலின் முக்கிய உறுப்புகளைப் பாதிக்கும். அதனால் தீவிர நீரிழிவு நோய் இருப்பவர்கள் ரயில்வே பணிக்குத் தகுதியானவர்கள் இல்லை என்று தெற்கு ரயில்வே தலைமை மருத்துவ இயக்குநர் அளித்த மனுவையும் அவர் தாக்கல் செய்தார்.

நீரழிவு நோய் உள்ளவரால் அலுவலகப் பணிகளை சரிவர செய்ய முடியாது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பதால், ரயில்வே தரப்பு வாதங்களை ஏற்க முடியாது. ஆகவே, தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். புஷ்பத்துக்கு 8 வாரங்களுக்குள் குரூப் டி பணி வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x