Published : 08 Jul 2015 07:44 AM
Last Updated : 08 Jul 2015 07:44 AM
ரூ.5 லட்சம் கேட்டு பள்ளிச் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் இரண்டு இளை ஞர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து 15-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சிவக்குமார் சசிகலா தம்பதியின் மகன் கிரீஷ் ஆனந்த். அண்ணாநகரில் தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். 20-10-2010 அன்று பள்ளிக்கு சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கொடுங்கையூர் காவல்நிலையத்தில் சிவக்குமார் புகார் கொடுத்தார்.
ரூ. 5 லட்சம் கேட்டு..
இதற்கிடையே சிறுவனின் தாய் சசிகலாவை செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர், “உங்கள் மகனை கடத்திவிட்டோம். ரூ. 5 லட்சம் கொடுத் தால்தான் சிறுவனை விடுவிப்போம். பணம் தராமல், போலீ ஸுக்குப் போனால் சிறுவனைக் கொன்று விடுவோம்” என்று மிரட்டியுள்ளார்.
மிரட்டல் விடுத்த செல்போன் நம்பரைக் கொண்டு குற்றவாளிகளை தேடிய காவல்துறையினர், வியாசர்பாடியைச் சேர்ந்த சுரேஷ் (22), மாதவரம் மில்க் காலனியைச் சேர்ந்த வில்லியம்ஸ் ஸ்டீபன் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்கள் மீது கடத்தல் மற்றும் பணம் கேட்டு மிரட்டியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், இருவரும் வீட்டிலிருந்த குடும்ப அட்டை, பான் கார்டு போன்றவற்றை அடமானம் வைத்து கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
சென்னை 15-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தனசேகரன் இவ்வழக்கை விசாரித்து, சுரேஷ், வில்லியம்ஸ் ஸ்டீபன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித் தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT