Published : 21 Jul 2015 08:47 AM
Last Updated : 21 Jul 2015 08:47 AM

20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: சாட்சிகளை நேரில் அழைத்துச் சென்று சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை - ஆகஸ்ட் 3-ல் அறிக்கை தாக்கல்

திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்த லில் ஈடுபட்டதாக கூறி, ஆந்திர சிறப்பு போலீஸ் படை கடந்த ஏப்ரல் 7-ம் தேதி அதிகாலை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தமிழகத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். அப்போது, போலீஸ் பிடியில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அருகே உள்ள அர்ச்சனாபுரம் காந்தி நகரைச் சேர்ந்த சேகர் (50), ஜவ்வாது மலை கீழ்கனவாவூரைச் சேர்ந்த இளங்கோவன் (22), தருமபுரி மாவட்டம் சித்தேரியைச் சேர்ந்த பாலசந்தர் (27) ஆகியோர் தப்பித்து வந்தனர்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வாக்குமூலம் அளித் துள்ள 3 பேரும், மதுரையில் இயங்கி வரும் மக்கள் கண் காணிப்பகம் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களிடம், ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தர வின் பேரில் ஆந்திர அரசு நியமித்த சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழு கடந்த ஜூன் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றது. மேலும், அவர்களிடம் எழுத்துப்பூர்வ வாக்குமூலத்தையும் பெற்றனர்.

இந்நிலையில், ஜூலை 6-ம் தேதி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, பதிலளித்த சிறப்பு புலனாய்வுக் குழு, ‘தப்பி வந்ததாக கூறப் படும் 3 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியபோது இடையூறு ஏற்பட் டது. அவர்கள் பயணித்து வந்ததாக கூறப்படும் வழித்தடங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரிக்க அனுமதி வேண்டும்’ என்று கேட்டுள்ளனர். அதன்படி அனுமதி வழங்கிய நீதிமன்றம், விசாரணையை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதைத்தொடர்ந்து, திருவண் ணாமலை சுற்றுலா மாளிகைக்கு 3 சாட்சிகளும் நேற்று வரவழைக் கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை குறித்த சம்மனை சிறப்பு புலனாய்வுக் குழு டிஐஜி ரமணகுமார் தலைமையிலான குழு நேரில் வழங்கியது. இதையடுத்து 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு 3 சாட்சிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்போடு தனித்தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

3 சாட்சிகளுக்கும் ஆபத்து

இதுகுறித்து மக்கள் கண் காணிப்பக ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம் கூறும்போது, “ஆந்திராவுக்கு 3 சாட்சிகளை அழைத்துச் செல்லக்கூடாது என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. இந்த நிலையில் 3 சாட்சிகளையும், அவர்கள் புறப்பட்ட இடத்தில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற இடம் வரை அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அனுமதி பெற் றுள்ளது. இதற்கு நாங்கள் ஆட்சேபம் தெரிவித்தோம். ஆந்திரா வுக்கு அழைத்துச் சென்றால் 3 சாட்சிகளுக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. அவர்கள் கைது செய்யப் படலாம். தமிழக அரசும் எந்த உதவியும் செய்யவில்லை. தப்பித்து வந்ததாக கூறப்படும் இடங்களான திருப்பதி வனப் பகுதியில் உள்ள டிஐஜி அலுவலக வளாகம் வரை இளங்கோவனையும் நகரி புத்தூர் வரை சேகர், பாலசந்தர் ஆகியோரையும் அழைத்து சென்றனர்” என்றார்.

சிறப்பு புலனாய்வுக் குழு டிஐஜி ரமணகுமார் கூறும்போது, “ஆந்திர உயர் நீதிமன்றத்தில் எங்களது விசாரணை அறிக்கை ஆகஸ்ட் 3-ம் தேதி தாக்கல் செய்யப்படும். ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நடப்பதால், விசாரணை குறித்த எந்த தகவலையும் தெரிவிக்க இயலாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x