Published : 13 Jul 2015 10:44 AM
Last Updated : 13 Jul 2015 10:44 AM

கொள்ளைக் கும்பல் தாக்குதல்: போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே போலீஸ் தலைமை காவலரை வெட்டி, மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த கொள்ளைக் கும்பலை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 12 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள சாட்டுபத்து பஸ் நிலையம் பகுதியில் ஒரு கும்பல் வாகனங்களை மறித்து கொள்ளையில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நந்தன்தட்டை விலக்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாப்பக்குடி போலீஸ் நிலைய தலைமை காவலர் குமரேச சீனிவாசன், காவலர் உதயசூரியன், இளைஞர் காவல் படையை சேர்ந்த அரவிந்த்குமார் ஆகியோர் அந்த பகுதிக்கு விரைந்தனர்.

போலீஸார் வருவதை கண்ட தும் சாட்டுபத்து பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் தப்பி யோடியது. போலீஸார் அவர்களை துரத்திச் சென்றனர். 2 பேர் மட்டும் பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர். பிடிபட்ட 2 பேரிடமும் போலீஸார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த சுமார் 20 பேர் கொண்ட கும்பல் திடீரென வந்து போலீஸார் மீது தாக்குதல் நடத்தியது. இதனை எதிர்பார்க்காத போலீஸார் அங்கிருந்து தப்பியோடினர்.

தலைமை காவலர் குமரேச சீனிவாசன் தனது மோட்டார் சைக்கிளை எடுக்க முயன்ற போது, அந்த கும்பல் அவரை தடுத்து அரிவாளால் வெட்டியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். மேலும், அவரது மோட்டார் சைக்கிளுக்கும் அந்த கும்பல் தீவைத்தது. அங்கிருந்த சரக்கு ஆட்டோ கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தினர்.

கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த தலைமை காவலர் குமரேச சீனிவாசன் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அம்பாசமுத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சாட்டுப் பத்தை சேர்ந்த வெயிலுமுத்து (25), செல்வம் (20), இசக்கி (32), லட்சுமிகாந்தன் (23), நடராஜன் (55) ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 12 பேரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x