Published : 18 Oct 2019 05:20 PM
Last Updated : 18 Oct 2019 05:20 PM

தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை

தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (அக்.18) செய்தியாளர்களைச் சந்தித்த புவியரசன், "தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 தினங்களுக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் பெரும்பாலான மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் நீலகிரி, திண்டுக்கல், கோயம்புத்தூர், தேனி, தருமபுரி, சேலம், மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

வரும் 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஒருசில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவாக சென்னை அயனாவரத்தில் 13 செ.மீ., பெரம்பூரில் 12 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீ. மழையும் நீலகிரியில் 12 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

அக்.1 முதல் இன்று வரை தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 9 செ.மீ. மழையில் 8 செ.மீ. கிடைக்கப் பெற்றுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் அதையொட்டிய கேரள கடற்கரைப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்".

இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x