Published : 17 Oct 2019 01:05 PM
Last Updated : 17 Oct 2019 01:05 PM

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; தமிழகம் முழுவதும் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

நேற்று முதல் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. நேற்று முதலே தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக இன்று (அக்.17) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், "தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி, நெல்லை, நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவாக தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 14 செ.மீ., கன்னியாகுமரி, கொடைக்கானலில் 13 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 12 செ.மீ., திருவாரூரில் 9 செ.மீ., மாமல்லபுரத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

நேற்று விடுக்கப்பட்ட குமரிக்கடல் பகுதிக்கான மீனவர்களுக்கான எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுகிறது. தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதன் காரணமாக மாலத்தீவு, லட்சத்தீவு அதனை ஒட்டியுள்ள கேரளக் கடற்கரை பகுதிக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,"

இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x