Published : 06 Jul 2015 08:48 AM
Last Updated : 06 Jul 2015 08:48 AM

வார விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ ரயிலில் அலைமோதிய கூட்டம்: 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம்

வார விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ ரயிலில் நேற்று 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

சென்னை மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை கடந்த 29-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. இது சென்னை மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய முதல் நாளிலேயே 40 ஆயிரம் பேர் அதில் பயணம் செய்தனர். இதன்மூலம் ரூ.17 லட்சம் வசூலானது. இதையடுத்து, அலுவலக நாட்கள் என்பதால் மக்கள் கூட்டம் சுமாராக இருந்தது.

இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவை தொடங்கி முதல் வார விடுமுறை நாள் என்பதால் மெட்ரோ ரயிலில் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய நாள் முதல் கடந்த வெள்ளிக்கிழமை வரை அதில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை சராசரியாக 40 ஆயிரம் முதல் 43 ஆயிரம் வரை இருந்தது. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வழக்கத்தை விட பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. நேற்று காலை 9 மணி முதலே பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள் என ஏராளமானோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். ரயில் நிலையங்கள் சுற்றுலா மையங்கள் போல் காட்சியளித்தன. பயணிகளுக்கு மெட்ரோ ரயிலின் பாதுகாப்பான பயணம் குறித்தும், அதை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. நேற்று (ஞாயிறு) மட்டுமே 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x