Last Updated : 11 Jul, 2015 01:41 PM

 

Published : 11 Jul 2015 01:41 PM
Last Updated : 11 Jul 2015 01:41 PM

பாலியல் பலாத்கார வழக்கு சமரச மையத்துக்கு அனுப்பிய உத்தரவு வாபஸ்: குற்றவாளிக்கு ஜாமீனையும் ரத்து செய்தது ஐகோர்ட்

மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய துடன், அவ்வழக்கை சமரச மையத் துக்கு அனுப்பி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதி மன்றம் திரும்பப் பெற்றது.

கடலூர் மாவட்டம் விருத்தா சலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மோகன் என்பவருக்கு கடலூர் மகளிர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் உத்தர விட்டது.

இந்த தண்டனையை நிறுத்தி வைத்து, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மோகன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ், “குற்ற வழக்குகள், பாலியல் வழக்குகளில் சமரசம் மூலம் தீர்வு காணப்படுகிறது. இவ் வழக்கைப் பொருத்தவரை, பாதிக் கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெண் குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சமரச மையம் மூலம் இவ்வழக்கில் தீர்வு காண முயற்சிக்கலாம். சமரச பேச்சுவார்த் தையில் பங்கேற்கும் வகையில் குற்றவாளி மோகனுக்கு இடைக்கால ஜாமீன் அளிக்கப் படுகிறது” என்று உத்தர விட்டிருந்தார்.

இந்த உத்தரவுக்கு சிலர் ஆதரவாகவும், பலர் எதிராகவும் கருத்து தெரிவித்தனர். இதற் கிடையே மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மதன்லால் தொடர்ந்த குற்றவியல் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜூலை 1-ம் தேதி அளித்த தீர்ப்பில், பாலியல் பலாத்கார வழக்கில் தீர்வு காண சமரச மையத்துக்கு போகும்படி நீதிமன்றம் அனுப்பி வைப்பது தவறு என்று கருத்து தெரிவித்தது.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் தனது உத்தரவை நேற்று முன்தினம் திரும்பப் பெற்றார். அதன் விவரம்:

மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சமரச மையத்துக்குப் போய் பேச்சு வார்த்தை நடத்துமாறு போடப் பட்ட உத்தரவு திரும்பப் பெறப்படு கிறது. மனுதாரர் மோகனுக்கு அளிக் கப்பட்ட இடைக்கால ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வழக்கு தொடர்பாக சமரச மையத்தில் பேச்சு வார்த்தை எதுவும் நடத்தக் கூடாது. இதனை உயர் நீதிமன்றப் பதிவாளர் (ஜூடிசியல்) உறுதி செய்ய வேண்டும்.

குற்றவாளி மோகன், கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் வரும் 13-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும். அவ்வாறு அவர் செய்யத் தவறினால், கடலூர் மகளிர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து அவரைக் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்க வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்படுவதை கூடுதல் அரசு வழக்கறிஞர் உறுதி செய்வதுடன், இரண்டு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை இரு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

முந்தைய தீர்ப்பின் சாராம்சம்

உயர் நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ், தனது முந்தைய தீர்ப்பில் கூறியிருந்ததாவது:

நம் நாட்டில் பெண்கள் பெரும் சொத்தாக கருதப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பதாகவும் பாராட்டுகிறார்கள். ஆண்களின் இச்சைக்கு பெண்கள் எளிதாக இலக்காகிவிடுகின்றனர். அதனால், அப்பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையும் சேர்த்து பாதிக்கப்படுகிறது.

இந்த வழக்கைப் பொருத்தவரை அப்பாவியான சிறுமியும், அவரது பெண் குழந்தையும் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறார்கள். அந்த சிறுமிக்கு பெற்றோர் இல்லை. இதுபோன்ற வழக்குகளில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மட்டும் பாதிக்கப்படுவார். இவ்வழக்கில் பலாத்காரத்தால் பிறந்த குழந்தையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது, மிகப்பெரிய சோகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x