Last Updated : 16 Jul, 2015 08:00 AM

 

Published : 16 Jul 2015 08:00 AM
Last Updated : 16 Jul 2015 08:00 AM

மாற்று இதயம் பொருத்திய 3 மணி நேரத்துக்குள் சென்னையில் பாகிஸ்தான் சிறுவன் பரிதாப மரணம்

சென்னையில் மாற்று இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 10 வயது பாகிஸ்தான் சிறுவன் திடீரென உயிரிழந்தான்.

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு தம்பதியர் துபாயில் வசிக்கின்றனர். இவர்களது மகன் அப்துல் (10). இவனது இதயம் வழக்கத்தைவிட பெரிய அளவில் வீங்கி இருந்தது. சரியாக சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்ட சிறுவனை சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர். டாக்டர்கள் அவனை பரிசோதித்து, மாற்று இதயம் பொருத்துவதே நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்று முடிவு செய்தனர். சிறுவனுக்கு இதயம் வேண்டி பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஹைதராபாதில் சாலை விபத்தில் சிக்கிய வைஷ்ணவ் (10) என்ற சிறுவன் கடந்த 13-ம் தேதி மூளைச்சாவு அடைந்தான். அவனது உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர். இதை அறிந்த மருத்துவக் குழுவினர் ஹைதராபாத் சென்று அந்த சிறுவனின் இதயத்துடன் விமானத்தில் நேற்று முன்தினம் மாலை 5.15 மணிக்கு சென்னை திரும்பினர். போக்குவரத்தை போலீஸார் ஒழுங்குபடுத்தி, வழியமைத்துக் கொடுத்ததால், விரைவாக ஆம்புலன்ஸ் முகப்பேர் மருத்துவமனையைச் சென்றடைந்தது.

இதையடுத்து, பாகிஸ்தான் சிறுவனுக்கு மாற்று இதயத்தை பொருத்தும் அறுவை சிகிச்சை தொடங்கியது. இரவு 11 மணி வரை அறுவை சிகிச்சை நடந்தது. பிறகு, சிறுவனுடைய இதயத்தின் செயல்பாடுகளை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், மாற்று இதயம் பொருத்தப்பட்ட பாகிஸ்தான் சிறுவன் நேற்று அதிகாலை 2 மணிக்கு உயிரிழந்தான். மாற்று இதயத்தை பொருத்தி 3 மணி நேரத்தில் மகன் இறந்ததால் பெற்றோர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தை பலமுறை தொடர்பு கொண்டும், மேலும் தகவல்களைப் பெற முடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x