Published : 22 Jul 2015 08:13 PM
Last Updated : 22 Jul 2015 08:13 PM

சுருக்கெழுத்தர் பணிக்கு 29-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சுருக்கெழுத்தர் பணிக்கு ஜூலை 29-ந் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சுருக்கெழுத்தர் (கிரேடு-3) பணியில் 331 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் தெரிவித்த விவரங்களை சரிபார்க்கும் வகையில் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 29 முதல் 31-ம் தேதி வரையும், ஆகஸ்ட் 3-ம் தேதி அன்றும் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு 667 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கான அழைப்புக் கடிதம் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு விரைவு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், சான்றிதழ் சரிபார்ப்புக்கான அட்டவணை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டதாலேயே அவர்கள் பணிக்கு தகுதி பெற்றுவிட்டதாக கருத இயலாது. குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x