Published : 03 Oct 2019 05:26 PM
Last Updated : 03 Oct 2019 05:26 PM

கண்டலேறுவிலிருந்து பூண்டி வரை குழாய் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்தால் ரூ.3000 கோடி விரயமாகும்: துரைமுருகன்

சென்னை

கண்டலேறுவிலிருந்து பூண்டி வரை குழாய் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்தால், ரூ.3000 கோடி விரயமாகும் என, திமுக பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக துரைமுருகன் இன்று (அக்.3) வெளியிட்ட அறிக்கையில், "1.10.2019 அன்று சென்னை, கொடுங்கையூரில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

அதாவது, "கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு நீர் வரும் கால்வாய் அடிக்கடி சேதம் அடைகிறது. அதை தவிர்க்க, கண்டலேறுவிலிருந்து பூண்டி வரை குழாய் அமைக்க ஆலோசித்து வருகிறோம்," என்பதுதான் அந்தத் திட்டம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்தத் திட்டம் குறித்து முழு விவரம் அறிந்து பேசினாரா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், இந்தத் திட்டம் முதல்வரின் சிந்தனையில் உதித்தத் திட்டம் அல்ல.

ஸ்ரீசைலம் முதல் பூண்டி வரை கிருஷ்ணா நீரை கொண்டு வருவதற்கு பல திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு, இறுதியில் எடுக்கப்பட்ட முடிவுதான் கால்வாய் மூலம் நீரைக் கொண்டு வருவது என்பது. இந்தத் திட்டத்திற்கு அன்று ஒப்புதல் கையொப்பமிட்டது அதிமுக அரசுதான்.

இந்தத் திட்டம் நிறைவேறிய பிறகும் குறிப்பாக, கண்டலேறு முதல் பூண்டி ஏரி வரை உள்ள கால்வாய் அடிக்கடி பழுதடைந்தும், நீர் சேதாரமும் ஏற்பட்டு வந்தது. இதனால் பூண்டிக்கு வரும் நீர் குறைந்து கொண்டே வந்தது.

இந்நிலையை அறிந்த தவத்திரு புட்டபர்த்தி சாய்பாபா, சென்னை மக்களுக்குத் தடையின்றி குடிநீர் கிடைக்க, அவராகவே முன்வந்து கண்டலேறு முதல் பூண்டி வரை குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்வதோடு, அதற்காக ஆகும் செலவையும் அவரே ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்தார்.

ஆனால், அதிமுக அரசு இந்தத் திட்டத்தை ஏற்க முடியாது என்று அறிவித்துவிட்டது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், கண்டலேறு முதல் பூண்டி வரை நிலச்சரிவு சரியாக இல்லை. எனவே, குழாய் மூலம் தண்ணீரைக் கொண்டு செல்வது சிரமம். தண்ணீர் சரியாகக் கிடைக்காது என்பதாகும்.

இந்த விவரமெல்லாம் கற்பனைக் கதை அல்ல. முதல்வர் விவரம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், பேராசிரியர் மோகன கிருஷ்ணன் எழுதி தமிழக அரசு வெளியிட்ட கிருஷ்ணா நதி நீர் விநியோகம் குறித்த புத்தகத்தினை எடுத்துப் படித்து தெரிந்து கொள்ளலாம்.

முதல்வரிடம் நான் தெரிந்து கொள்ள விரும்புவதெல்லாம், கண்டலேறு முதல் பூண்டி வரை நிலச்சரிவு சரி செய்யப்பட்டு விட்டதா? இன்றைக்கு அந்தத் திட்டத்தை அறிவித்திருப்பதும் அதிமுக அரசுதான். அன்று, இதே திட்டத்திற்கு மறுப்பு சொன்னதும் இதே அதிமுக அரசுதான். சத்யசாய்பாபா சொன்னபோது அதிமுக அரசு ஒத்துப்போயிருந்தால், அரசுக்கு பணமும் மிச்சம், திட்டமும் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருக்கும். 15 ஆண்டுகளாக தட்டுப்பாடின்றி தண்ணீரும் வந்திருக்கும்.

இன்றைய நிலவரப்படி, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற சுமார் ரூ.3,000 கோடிக்கு மேல் ஆகும் என்று பொறியாளர்கள் கூறுகிறார்கள். ரூ.3000 கோடியா? நல்ல வேட்டை," என துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x