Published : 18 Jul 2015 08:15 AM
Last Updated : 18 Jul 2015 08:15 AM

பெற்றோர், சகோதரியை அடுத்தடுத்து இழந்து தவிப்பு: மூளை வளர்ச்சி குன்றிய அண்ணனை பராமரிக்கும் மாற்றுத்திறனாளி தங்கை - அரசின் உதவிக்காக காத்திருப்பு

மனவளர்ச்சி குன்றிய அண்ணனை தாயாக இருந்து கவனித்து வருகிறார் மாற்றுத்திறனாளியான அவரது தங்கை. பெற்றோரையும் உடன்பிறந்த சகோதரியையும் இழந்து தவிக்கும் இவர்கள் அரசின் உதவியை எதிர்பார்க்கின்றனர்.

மதுரை கரும்பாலை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவரது மனைவி மைதீன் பாத்திமா. இவர்களுக்கு செய்யது அலி பாத்திமா, சுல்தான் அலாவுதீன் (36), கதிஜா பானு (30) என 3 பிள்ளைகள். மூவருமே மாற்றுத்திறனாளிகள். உடல் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்கள்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென முகமது இஸ்மாயில் இறந்தார். கணவரின் இழப்பால் தவித்து வந்த மைதீன் பாத்திமா அடுத்த 2 ஆண்டுகளில் காலமானார்.

தனித்து விடப்பட்ட 3 மாற்றுத்திறனாளி குழந்தைகளை யும் அவர்களின் தாய்மாமா ஷேக் மதார் அரவணைத்தார். இந்நிலையில் தாயாக இருந்து தம்பி, தங்கையை கவனித்து வந்த மூத்த குழந்தை அலி பாத்திமாவும் ஓராண்டுக்கு முன் இறந்துவிட்டார். தற்போது அந்த குடும்பத்தில் மிச்சமிருப்பது மூளை வளர்ச்சி குன்றிய சுல்தான் அலாவுதீனும், மாற்றுத்திறனாளி தங்கை கதிஜா பானுவும்தான். தாய்மாமா ஷேக் மதார் டிரைசைக்கிள் தொழிலாளி. வருகின்ற சொற்ப வருமானத்தில் முழுமையாக அவர்களை பராமரிக்க முடியாமல் தவிக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘பெற்றோர் இறந்த பிறகு, மூத்த குழந்தையான செய்யது அலி பாத்திமாதான் மற்ற இருவரையும் தாயைப்போல பார்த்து வந்தார். ஓராண்டுக்குமுன் அவரும் இறந்துவிட்டார்.

மற்ற இரு குழந்தைகளை யாவது நன்றாக வளர்க்க வேண்டும் என்று ஊனமுற்றோர் உதவித்தொகை கேட்டு விண்ணப் பித்தோம். சுல்தான் அலாவுதீனுக்கு மட்டும் கிடைக்கிறது. கதிஜா பானு வீட்டு வேலைக்கு செல்கிறார். பின்னர் வந்து குடும்ப வேலைகளையும் கவனிக்கிறார். அவர் மாற்றுத்திறனாளி ஆனாலும் அண்ணனை தாயைப் போல பார்த்துக் கொள்கிறார்.

போதுமான வருமானம் இல்லாததால் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். கதிஜா பானுவுக்கும் ஊனமுற்றோர் உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும், 30 வயதைக் கடந்தும் திருமணமாகாமல் உள்ள அவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண் டும் என்றும், ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறேன். எந்த நடவடிக்கையும் இல்லை’ என்கிறார் வேதனை பொங்க.

இன்று ரம்ஜான் பண்டிகை. புத்தாடை அணிந்து மகிழ்ச்சி பொங்க கொண்டாட வேண்டிய இந்த நாள் இவர்களுக்கு மட்டும் மற்றொரு சாதாரண நாளாகவே கடந்து செல்லும். நல்ல உடை உடுத்தியே பல ஆண்டுகள் ஆகின்றன.

இருப்பினும் ‘கருணை உள்ளவர்கள் மூலம் அல்லா எங்களின் குடும்பத்துக்கு உதவுவார்’ என நம்பிக்கையுடன் கூறுகிறார் ஷேக் மதார். அவரது செல் நம்பர்: 93603 89421.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x