Published : 01 Oct 2019 06:51 PM
Last Updated : 01 Oct 2019 06:51 PM

மழையே இல்லாமல் போனாலும் இனி சென்னையில் குடிநீர்  பிரச்சினை வராது: முதல்வர் பழனிசாமி பேட்டி 

சென்னை

இயற்கை பொய்த்தாலும், பருவ மழை பொய்த்தாலும், 876 மில்லியன் லிட்டர் நீரை பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய சூழ்நிலையை அரசு செயல்படுத்த உத்தேசித்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று, சென்னை, கொடுங்கையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2014-2015-ம் ஆண்டு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் கொடுங்கையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அவரின் அறிவிப்பின்படி, கொடுங்கையூரில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, இன்றையதினம், திறக்கப்பட்டுள்ளது. இதில் நாள் ஒன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் கழிவுநீர் மறுசுழற்சி மூலம் சுத்திகரிக்கப்படுகின்றது.

ஏற்கெனவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அறிவிப்பின்படி, கோயம்பேடு பகுதியிலும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு சுமார் ரூபாய் 486 கோடி மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம், இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் முடிவு பெற்று, பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.

அதேபோன்று, நெசப்பாக்கம் மற்றும் பெருங்குடியில் தலா 10 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரித்து நன்னீராக்கும் இரண்டு நிலையங்கள் நிறுவப்பட்டு, இன்னும் மூன்று மாதங்களில் பணிகள் நிறைவு பெற்று, பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன்மூலமாக, கொடுங்கையூரில் 45 மில்லியன் லிட்டர், கோயம்பேடு பகுதியில் 45 மில்லியன் லிட்டர், நெசப்பாகத்தில் 10 மில்லியன் லிட்டர், பெருங்குடியில் 10 மில்லியன் லிட்டர் என, நாள் ஒன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். இந்த சுத்திகரிக்கப்பட்ட நீரை 9 நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுத்திகரிப்பு தொடங்கியவுடன் அந்த 9 நிறுவனங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கப்படும். இதன்மூலமாக ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நன்னீர், 185 மி.லி என குறைக்கப்பட்டு, அது குடிநீருக்கு பயன்படுத்தப்படும் என்ற செய்தியை தெரிவிக்க விரும்புகின்றேன்”.

இவ்வாறு தெரிவித்த அவர் செய்தியாளர்கள் கேள்விக்கு அளித்த பதில்:

சென்னை மக்களுடைய குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யக்கூடிய வகையில் பேரூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பணிகள் எப்பொழுது தொடங்கும்?

விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்தப் பணி நிறைவு பெற்றவுடன் 400 மில்லியன் லிட்டர் பேரூரில் உருவாக்குவதற்கு அரசால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன் மூலம் சுமார் 876 மி.லி நீர் சென்னை மாநகர மக்களின் குடிநீர்ப் பிரச்சினையை போக்குவதற்கு வழங்கப்படும். இயற்கை பொய்த்தாலும், பருவ மழை பொய்த்தாலும், 876 மில்லியன் லிட்டர் நீரை பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய சூழ்நிலையை எங்களுடைய அரசு செயல்படுத்த உத்தேசித்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, கண்டலேறிலிருந்து திறக்கப்படுகின்ற நீர் பூண்டி வந்தடைகிறது. வருகின்ற வழியில் அதிகளவில் நீர் வீணாவதை தடுப்பதற்காக கண்டலேறிலிருந்து பூண்டி வரை பைப் லைன் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. ஆந்திர முதலமைச்சருடன் தொடர்பு கொண்டு, பேசி, இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசு முயற்சி செய்து கொண்டிருக்கின்றது.

இந்தத் திட்டத்தை பைப் லைன் மூலம் நிறைவேற்றுகின்றபொழுது, கிருஷ்ணா நதி திறக்கப்படுகின்றபோது, கண்டலேறிலிருந்து ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் முழுவதும் பூண்டி ஏரிக்கு வந்தடையும். நமக்குத் தேவையான நீர் கிடைக்கும். சென்னை மாநகர மக்களின் குடிநீர்ப் பிரச்சினை தீர்ப்பதற்கு வழிவகை ஏற்படும்.

முன்னாள் முதல்வர் வீராணம் திட்டம் கொண்டு வந்ததுபோல், உங்களுடைய அரசாங்கம் எதுபோன்ற திட்டங்களை வைத்திருக்கின்றீர்கள்?

நிறைய திட்டங்களை தெரிவித்திருக்கின்றோம். எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும், பருவ மழை பொய்த்தாலும், இயற்கை பொய்த்தாலும், 876 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைப்பதற்கு அரசு வழிவகை செய்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கிருஷ்ணா நதி திறக்கப்படுகின்றபொது, கண்டலேறிலிருந்து பைப் லைன் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் முழுவதும் பூண்டி ஏரிக்கு வந்தடையும்பொழுது நமக்கு அதிகளவில் நீர் கிடைக்க வாய்ப்பிருக்கின்றது. அதனையும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

கிருஷ்ணா நதிநீரை பைப்லைன் மூலம் கொண்டு வருவோம் என்று சொல்கிறீர்கள் ஆனால், பாலாற்றில் தடுப்பணைகளை உயர்த்திக் கொண்டு வருகிறார்கள் என்ற பிரச்சினை இருக்கிறதே?

ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது, அந்த ஒப்பந்தத்தை மீறி அவர்கள் தடுப்பணையை உயர்த்துகின்றார்கள். தடுப்பணையை உயர்த்தக்கூடாது, புதிய தடுப்பணை கட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கின்றது. வழக்கு வருகின்றபொழுது, அதற்கு தீர்வு காணப்படும்.

அண்டை மாநிலங்களுடன் இணக்கமாக இருக்கும் ஒரு நடவடிக்கையாகத்தான் கேரள முதல்வரை நீங்கள் சந்தித்தீர்கள், அதேபோல் ஆந்திர முதல்வரையும் சந்திப்பீர்களா?

அண்டை மாநிலங்களோடு சுமுகமான உறவு இருக்கின்ற விதமாகத்தான் கிருஷ்ணா நதிநீரை பெறுவதற்காகக்கூட, உள்ளாட்சித் துறை அமைச்சரும், மீன்வளத்துறை அமைச்சரும் நேரடியாகச் சென்று ஆந்திர முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தவுடன், உடனடியாக, சென்னை மாநகர மக்களுக்குத் தேவையான குடிநீர் வழங்கப்படும் என்ற அறிவிப்பை கொடுத்து, அதற்கான நடவடிக்கையை எடுத்து தண்ணீர் திறக்கப்பட்டு, கிருஷ்ணா நதி நீர் வந்து கொண்டிருக்கிறது.

என்ஜினியரிங் பாடத் திட்டத்தில் பகவத் கீதை சேர்க்கப்பட்டிருப்பது குறித்து உங்களது கருத்து என்ன?

அதைப்பற்றி உயர்கல்வித் துறை அமைச்சர் விரிவாக சொல்லியிருக்கிறார்.

நாம் கோதாவரி நீர் பெறுவதற்கு ஏதாவது வாய்ப்பிருக்கிறதா?

மத்திய அரசு இந்தத் திட்டத்தை வகுத்துக் கொண்டிருக்கிறது. பல மாநிலங்கள் ஒன்றாகச் சேர்ந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்றுகிறது. அந்த அடிப்படையில் ஏற்கனவே, பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பின்படி, அப்போது நீர்வளத் துறை அமைச்சராக இருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்தத் திட்டத்தை, அப்பொழுதே துவக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஆகவே, கோதாவரி-காவேரி இணைப்புத் திட்டம் என்பது தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களையும் ஒன்றாக இணைத்துத்தான் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. மத்திய அரசால் அதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது மத்திய அரசு செயல்படுத்துகின்ற திட்டம். தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களால் அவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்று மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்று நாமும் தெரிவித்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் ஒன்றாகச் சேர்ந்து கோதாவரி-காவேரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும். இதன் மூலம், தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பயனடையும். அதுமட்டுமல்ல, இந்தத் திட்டம் நிறைவேறுகின்றபோது, நம்முடைய பாசனப் பரப்பு ஓரளவு விரிவடையும். ஆகவே, நீண்டகால பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதற்காக அம்மா இருக்கின்றபொழுதே மாயனூர் கதவணையிலிருந்து குண்டாறு வரை இந்தத் திட்டத்தை நீட்டிக்க வேண்டுமென்று சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

அவர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில்,. மாயனூர் கதவணையிலிருந்து குண்டாறு வரை கால்வாய் அமைப்பதற்கு எங்களுடைய அரசால் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள், வைகை, குண்டாறு என பகுதி, பகுதியாக பிரித்து அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும். ஆகவே, ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் அனைத்து நீரும் மக்களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையிலே எங்களுடைய அரசு செயல்படும்.

பிரதமரிடம் கொடுத்த கோரிக்கைத் தீர்மானத்தில் நடந்தாய் வாழி காவேரி திட்டம் தொடர்பாக கோரிக்கை வைத்திருக்கிறீர்கள், அந்தத் திட்டம் எப்பொழுது தொடங்கும்?

நாங்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்து பத்திரிகைகளிலும் தெளிவாக வந்துள்ளது. எங்களுடைய எண்ணங்களெல்லாம், தமிழகத்தில் பருவகாலங்களில் பொழிகின்ற மழைநீர் முழுவதையும் சேமித்து மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், நீர் மேலாண்மைத் திட்டம் மூலமாக தொடர்ந்து செயலாற்றி எங்களுடைய அரசு மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

அதேபோல், அண்டை மாநிலங்களிலிருந்து, கோதாவரி - காவேரி போன்ற திட்டங்களின் மூலமாக தண்ணீரை, விவசாயப் பெருங்குடி மக்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் ஈடேறுகின்ற விதத்தில், அம்மாவின் அரசு செயலாற்றிக் கொண்டிருக்கிறது” இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x