Published : 30 Sep 2019 09:41 AM
Last Updated : 30 Sep 2019 09:41 AM

ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்னை வந்தார் பிரதமர் மோடி: தமிழ்மொழி பழமையானது என பேச்சு 

சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை வரவேற்கக் காத்திருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உள்ளனர் | படம்: ஏஎன்ஐ

சென்னை

சென்னை ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தார். உலகில் பழமையான மொழி தமிழ் என்று அமெரிக்காவில் பேசினேன் என்று பிரமதர் மோடி விமான நிலையத்தில் தெரிவித்தார்.

அவரை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

சென்னையில் கடந்த 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐஐடி உயர் கல்விநிறுவனம் , இந்த ஆண்டு 60-வது ஆண்டில் அதாவது வைர விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி, இன்று நடக்கும் ஐஐடியின் 56-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

இதற்காக அவர், டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு இன்று காலை 9 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் பிரதமரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.


சென்னை வந்த பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் பாஜகவினர் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில், "ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை வரவேற்க நீங்கள் இங்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அமெரிக்காவில் இந்தியர்கள் சிறப்பாக வாழ்கிறார்கள். இந்தியா பற்றி அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அமெரிக்கா சென்றிருந்தபோது அங்கு பேசும்போது தமிழ் மொழிதான் உலகின் பழமையான மொழி என்று பேசினேன். அமெரிக்க ஊடகங்களில் தமிழ் பற்றி அதிகமான செய்திகள் வருகின்றன. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்துங்கள். பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிடச் சொல்லவி்லலை, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைத்தான் சொல்கிறேன்" எனத் தெரிவித்தார்

விமான நிலையத்தில் இருந்து சிறிது ஓய்வுக்குப் பின் ஹெலிகாப்டரில் புறப்பட்டு தரமணியில் உள்ள சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவுக்குச் செல்லும் பிரதமர், 'சிங்கப்பூர் இந்தியா ஹேக்கத்தான் 2019’ என்ற போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். அதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு நடக்கும் ஐஐடி-யின் 56-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார். மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்று கிறார்.

பிரதமர் வருகையையொட்டி சென்னை நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையம், ஐஐடி வளாகம், விழாக்கள் நடக்கும் அரங்கம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் ஹெலிகாப்டர் வந்திறங்குவதற்கு வசதியாக ஐஐடி வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளம் சீரமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x