Published : 12 Jul 2015 10:58 AM
Last Updated : 12 Jul 2015 10:58 AM

வகுப்பறையில் ரகளை செய்த பிளஸ் 2 மாணவர்கள்

பள்ளி வகுப்பறையில் ரகளை செய்த பிளஸ் 2 மாணவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 2 வகுப்பில் நேற்று முன்தினம் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது சில மாணவர்கள் புலம்பிக் கொண்டு இருந்தனர். அதில் ஒரு மாணவர் திடீரென வாந்தி எடுத்தார். இதுகுறித்து ஆசிரியை விசாரித்தபோது 3 மாணவர்களும் ஆசிரியையிடம் ரகளை செய்தனர்.

மாணவர்களின் செயலைப் பார்த்து வகுப்பில் இருந்த மாணவிகள் முகம் சுளித்தனர். இதுபற்றி தலைமை ஆசிரியையிடம் ஆசிரியை புகார் அளித்தார்.

தலைமை ஆசிரியை வந்து மாணவர்களை கண்டித்தும் அவர்கள் அடங்கவில்லை. இதையடுத்து, அவர் போலீஸில் புகார் செய்தார். சங்கர்நகர் போலீஸார் விரைந்து வந்து ரகளை செய்த 3 மாணவர்களையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அவர்கள் உணவு இடைவேளையில் வெளியில் சென்று மது அருந்திவிட்டு வந்ததும், போதையில் வகுப்பறையில் ரகளை செய்ததும் தெரியவந்தது. மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களுக்கு அறிவுரை வழங்கிய போலீஸார், மாணவர்களையும் எச்சரித்து அனுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x