Published : 16 Jul 2015 06:12 PM
Last Updated : 16 Jul 2015 06:12 PM
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் தனி அறை இரவில் பார்களாக பயன்படுத்துவதாக `தி இந்து’ உங்கள் குரலில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலூட்டும் தாய்மார்கள் பணி மற்றும் பயணம் நிமித்தமாக வெளியே செல்லும்போது பேருந்து நிலையங்களில் காத்திருக்க வேண்டியுள்ளது. தங்கள் இருப்பிடத்தில் இருந்து பணி இடத்திற்கோ அல்லது தாங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கோ செல்ல சில மணி நேரங்கள் தேவைப்படும். இதற்காக ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் ரோட்டரி சங்கம் மூலம் பாலூட்டும் தாய்மார்களுக்காக தனி அறை கட்டப்பட்டது.
மேலும் ஆகஸ்ட் மாதம் 1 முதல் பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் நேரத்தில் அன்னையர் தங்கள் குழந்தைகளுக்கு தனிமையில் பாலூட்டும் வகையில் அரசு பேருந்து முனையங்கள் (bus terminals) நகராட்சி மற்றும் நகர பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து பணிமனைகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் அமைக்க முதல்வர் ஜெயலலிதா கடந்த 3-ம் தேதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்களுக்கான தனி அறை இரவு நேரங்களில் திறந்து கிடப்பதால் குடிமகன்கள் பார்களாக பயன்படுத்துவதாக உங்கள் குரலில் `தி இந்து’ வாசகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ராமநாதபுரம் மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரிடம் கேட்டபோது, பேருந்து நிலையத்தில் குடி போதையில் பொதுமக்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT