Published : 07 Jul 2015 07:14 AM
Last Updated : 07 Jul 2015 07:14 AM
ஆலந்தூர் - கோயம்பேடு இடையே தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய முதல் வாரத்தில் (7 நாட்களில்) மொத்தம் 2.83 லட்சம் பேர் பயணம் செய்துள் ளனர். இதன் மூலம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ரூ.1.08 கோடி வசூலாகியுள்ளது.
சென்னை மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கனவு திட்டமாக மெட்ரோ ரயில் சேவையை (ஆலந்தூர் கோயம் பேடு) முதல்வர் ஜெயலலிதா கடந்த 29-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த சேவை பொது மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. குறிப்பாக மெட்ரோ ரயிலில் ஏசி வசதியுடன் கூடிய பயணம், பாதுகாப்பு மற்றும் சிறப்பு அம்சங்களை கொண்டு அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆகியவை வரவேற்பை பெற்றுள்ளது.
மெட்ரோ ரயில்சேவை தொடங்கிய முதல் நாளன்று மட்டுமே 40 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். இதன்மூலம் ரூ.17 லட்சம் வசூலானது. இதையடுத்து, அலுவலக நாட்கள் என்பதால் மக்கள் கூட்டம் கணிசமாக குறைந்திருந்தது. அடுத்த 3 நாட்களில் தலா 30 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். ஆனால், கடந்த சனி மற்றும் ஞாயிறுகளில் மக்கள் கூட்டம் மெட்ரோ ரயில் நிலையங்களில் அலைமோதியது. சுற்றுலாத் தலத்தை பார்க்க வருவது போல், மக்கள் குடும்பத்துடன் திரண்டு வந்து மெட்ரோ ரயில் நிலையங் களை பார்த்தனர் பின்னர், மெட்ரோ ரயில்களில் மகிழ்ச்சி யான பயணத்தை மேற்கொண் டனர்.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறுகை யில், ‘‘மெட்ரோ ரயில்சேவை தொடங்கிய முதல் நாளில் 40 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். பின்னர், அடுத்த நாளில் 43 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். இதையடுத்த 3 நாட்களில் தலா 30 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். மெட்ரோ ரயில்சேவை தொடங்கி முதல் வார விடுமுறை என்பதால் சனி, ஞாயிறுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சனிக்கிழமை 50 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். இதனால் ரூ.20 லட்சம் வசூலானது. ஞாயிற்றுகிழமை அதிகபட்சமாக 73,000 பேர் பயணம் செய்தனர். இதனால் ரூ.28 லட்சம் வசூலானது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய 7 நாட்களில் மொத்தம் 2.83 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.1.08 கோடி வசூலாகியுள்ளது’’ என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT