Published : 14 Jul 2015 09:32 PM
Last Updated : 14 Jul 2015 09:32 PM
நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தத்தை கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட மாநில முதல்வர்களுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மாநிலங்களின் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட திட்டக் குழுவை கலைத்துவிட்டு நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பை மத்திய அரசு அமைத்துள்ளது. மாறிவரும் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப புதிய அமைப்பு செயல்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கு அதிக நிதி ஆதாரத்தையும், அதிகாரத்தையும் கொடுத்தால்தான் ஒட்டுமொத்த இந்தியாவும் வளர்ச்சி பெறும். எனவே, மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடரவும் புதிய திட்டங்களை செயல்படுத்தவும் பாஜக அரசு முன்வர வேண்டும்.
2013-ல் கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான பல்வேறு திருத்தங்களை பாஜக அரசு செய்துள்ளது. இதனால்தான் இந்த சட்டத் திருத்தத்தை அரசியல் கட்சிகள், அமைப்புகள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர்.
ஆனாலும் இந்தச் சட்டத் திருத்ததை நிறைவேற்றுவதில் பாஜக அரசு முனைப்பாக இருக்கிறது. இது தொடர்பாக 15-ம் தேதி (நாளை) அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். 10 மாநில முதல்வர்கள் இக்கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள், நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தத்தை கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT