Published : 13 Jul 2015 12:42 PM
Last Updated : 13 Jul 2015 12:42 PM
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மோகன் கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
விருத்தாசலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மோகன் என்பவருக்கு கடலூர் மகளிர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டது.
இந்த தண்டனையை நிறுத்தி வைத்து, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மோகன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ், "குற்ற வழக்குகள், பாலியல் வழக்குகளில் சமரசம் மூலம் தீர்வு காணப்படுகிறது.
இவ்வழக்கைப் பொருத்தவரை, பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெண் குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சமரச மையம் மூலம் இவ்வழக்கில் தீர்வு காண முயற்சிக்கலாம். சமரச பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் வகையில் குற்றவாளி மோகனுக்கு இடைக்கால ஜாமீன் அளிக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (ஜூலை 11-ம் தேதி) மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி அவ்வழக்கை சமரச மையத்துக்கு அனுப்பி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதி மன்றம் திரும்பப் பெற்றது.
மேலும் இன்றைக்குள் (திங்கள்கிழமைக்குள்) மோகன் கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் சரணடையுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, மோகன் இன்று காலை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை கடலூர் சிறையில் அடைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து மோகன் சிறையில் அடைக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT