Published : 04 Jul 2015 02:47 PM
Last Updated : 04 Jul 2015 02:47 PM
சிவகங்கை அருகே இடையமேலூர் நாச்சத்தம்மன் கோயில் ஆனித் திருவிழாவில், மேல்நாடு, கீழ்நாடு என சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மண்பானைகளில் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். இதற்காக 15 நாள்களுக்கு முன்பே விரதமிருந்து பொங்கல் விழாவை தொடங்குகின்றனர்.
நேற்று வேளாங்கப்பட்டியில் உள்ள கோயில் வீட்டிலிருந்து ஒரு குடும்பத்துக்கு ஏழு மண்பானைகள் வீதம் 83 பெண்கள், பானைகளை தலையில் சுமந்து நாச்சத்தம்மன் கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்றனர்.
பங்காளிகள் சாமியாட்டம் ஆடி, கோயிலுக்கு எதிரே உள்ள இடத்தில் பொட்டிக்கிழங்கு தோண்டி எடுத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். பின்னர், மாலையில் நாச்சத்தம்மன் கோயில் முன் அனைவரும் கூடி பொங்கல் வைத்தனர். எச்சில்படாத பாத்திரத்தை பயன்படுத்தவேண்டும் என்பதால், மண்பானையில் தண்ணீர் பிடித்து, அரிசி, பருப்பு களைந்து, பொங்கல் வைப்பது என அனைத்தும் மண்பானைகளில்தான் செய்கின்றனர்.
பிறகு, அடுப்பு வைக்காமல் மண்தரையில் குழிதோண்டி அந்த மண்ணையே அடுப்பாக்கி, விறகு வைத்து பொங்கலிடுகின்றனர்.பிறகு, பொங்கலுக்கு பயன்படுத்திய ஏழு பானைகளையும் எடுத்துக் கொண்டு உடையாமல் பத்திரமாய் வீடு சேர்ந்தனர். அவ்வாறு சேர்ந்தால் அம்மன் அருள் கிட்டும் என அக்கிராமத்தினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT