Last Updated : 05 Jul, 2015 10:03 AM

 

Published : 05 Jul 2015 10:03 AM
Last Updated : 05 Jul 2015 10:03 AM

எனது கணவர் ஒரு உயிரைக் கொடுத்து பல உயிர்களை காப்பாற்றியிருக்கிறார்: ‘ஹெல்மெட் கட்டாயம்’ வழக்கின் மனுதாரர் மல்லிகா உருக்கம்

தனது கணவரின் மரணத்தைத் தொடர்ந்து மோட்டார் வாகன விபத்தில் இழப்பீடு கோரும் கொடுங்கையூரைச் சேர்ந்த மல்லிகா தொடர்ந்த வழக்கில் தான் உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் “ஹெல்மெட் கட்டாயம்” என்ற வரலாற்று தீர்ப்பை வழங்கினார். இந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப் பட்ட வழக்கும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான முதல் அமர்வும் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவுக்குப் பின்னால் கணவனை இழந்த மனைவியும் தந்தையை இழந்த மகளின் வலி மிகுந்த கண்ணீர் கதை இருக் கிறது. கடந்த 2-5-2011 அன்று விருகம்பாக்கம் வட்டாரப் போக்கு வரத்து அலுவலகம் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த போது வேன் மோதியதில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவ மனையில் 3 நாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்.குமார் (30). இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீள முடி யாமல் தவிக்கிறார் இவரது மனைவி மல்லிகா. “தி இந்து” தமிழ் நாளிதழுக்காக பேசினோம். அவர் அளித்த உருக்கமான பேட்டி:

இது ஒரு முக்கியமான தீர்ப்பு தான். எனது கணவர் ஹெல்மெட் போடாம போனதால்தான் இன்னிக்கு நான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் உடல ளவிலும், மனதளவிலும் கஷ்டப் பட்டுள்ளேன். எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு. நாங்க காதலித்து ஆசைப்பட்டுத்தான் கல்யாணம் பண்ணினோம். நூறு வருசம் வாழ வேண்டிய வாழ்க்கை நாலு வருஷத்தோட முடிஞ்சு போச்சு. இந்த விபத்தினால நான் எல்லாத்தையும் இழந்து நிற்கிறேன். இன்னிக்கு என் குழந்தை அனாதையாக நிக்கிறா. வாழ்க்கையில அவளுக்கு என்னால எல்லாம் வாங்கிக் கொடுக்க முடியும். அப்பாங்கிற அந்த உறவை மட்டும் வாங்கிக் கொடுக்க முடியாது. இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது.

எனக்கு சொந்த ஊர் திருச்சி கே.கே.நகர். மகள் மித்ராஸ்ரீ-க்கு எட்டு வயதாகிறது. மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். வாடகை வீட்டில் இருக்கோம். அவர் இருந் தப்போ எல்லாத்தையும் பார்த்துக் கிட்டார். இப்போது எனக்கு வரும் கொஞ்ச சம்பளத்தில் வீட்டு வாடகை, குழந்தையின் படிப்பு என எல்லாத்தையும் பார்க்க வேண்டியுள்ளது.

என் மகள் அப்பாவைப் பற்றி கேட்கும்போது, இப்போதைக்கு அப்பா சாமிகிட்ட போயிருக்கிறார். உனக்கு எது வேணும்னாலும் என்னைக் கேளும்மா. என் மூலமாக அவர் உனக்கு செய் வாரு. அப்படித்தான் சொல்லி சமாளிக்கிறேன். இருந்தாலும் அப்பா இல்லையே என்ற ஏக்கம் அவளுக்கு இருக்கத்தான் செய் கிறது. ஸ்கூலுக்கு எல்லோரோட அப்பா, அம்மா வர்றாங்க. நீங்க யாருமே வருவதில்லை என மகள் சொல்லும்போது வேதனைக்கு அளவில்ல.

வீட்டில் அவரோட போட்டோ கூட வைக்கவில்லை. அதைப் பார்த்தால் அழுவாள். அவளுக்கு விவரம் தெரிந்து எப்போது போட்டோ வைக்கலாம் என்று சொல்கிறாளோ அப்போது மாட்டிக் கொள்ளலாம் என்று நினைத் துள்ளேன்.

ஹெல்மெட் போடுவதை யாரும் ஆர்டராக நினைக்காதீங்க. சட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கண்டிப்பாக ஹெல்மெட் போட்டு உங்க குடும்பத்தை காப்பாத்துங்க. அவர்களை நிர்கதியாக விட்டு விட்டுப் போயிடாதீங்க.

கெட்டதிலும் நல்லது நடந்திருக் கிறது. அவர் ஒருத்தர் உயிரைக் கொடுத்து, எல்லோருடைய உயி ரையும் காப்பாத்தியிருக்கிறார். அந்த பெருமை அவருக்குதான் போகும்.

கடைசி வரை வாழ வேண்டும் என்று நினைத்தோம். விதி மூலம் எல்லாம் முடிந்துவிட்டது.ஹெல்மெட் போட்டிருந்தால் அவர் உயிர் தப்பியிருக்கலாம். இது ஒரு ஆறாத வடு, நான் சாகும் வரை என் மனதில் இருக்கத்தான் செய்யும் என்று கண்கலங்கினார் மல்லிகா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x