Published : 14 Jul 2015 09:40 AM
Last Updated : 14 Jul 2015 09:40 AM

உயர் நீதிமன்றம் ஜாமீனை திரும்பப்பெற்றதால் பாலியல் வழக்கு குற்றவாளி மீண்டும் சிறையில் அடைப்பு: தண்டனை தொடர நீதிபதி உத்தரவு

பாலியல் வழக்கில் உயர் நீதிமன்றம் ஜாமீனை திரும்பப் பெற்றதால் குற்றவாளி கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் தண்டனையை தொடர நீதிபதி உத்தரவிட்டார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கொடிகளம் கிராமத்தில் கடந்த 2008-ம் ஆண்டு 15 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வேலு என்பவரது மகன் மோகன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் மோகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டது.

இந்த தண்டனையை நிறுத்தி வைத்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மோகன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த மாதம் 18-ம் தேதி விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ், "குற்ற வழக்குகள், பாலியல் வழக்குகளில் சமரசம் மூலம் தீர்வு காணப்படுகிறது.

இவ்வழக்கைப் பொருத்தவரை பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெண் குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சமரச மையம் மூலம் இவ்வழக்கில் தீர்வு காண முயற்சிக்கலாம். சமரச பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் வகையில் குற்றவாளி மோகனுக்கு இடைக்கால ஜாமீன் அளிக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந் தும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலை யில் கடந்த 11-ம் தேதி மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி இவ்வழக்கை சமரச மையத்துக்கு அனுப்பி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதி மன்றம் திரும்பப் பெற்றது.

மேலும் ஜூலை 13-ம் தேதிக்குள் மோகன் கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் சரணடையுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை யடுத்து நேற்று கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் மோகன் ஆஜரானார். நீதிபதி செல்வம் விசாரணை நடத்தி தண்டனையை தொடர உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீஸார் மோகனை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x