Published : 21 Jul 2015 08:46 AM
Last Updated : 21 Jul 2015 08:46 AM

மது விற்பனைக்கு தடை கோரி தமிழக அமைச்சர் மீது வழக்கு: நாளை விசாரணை

டாஸ்மாக் மது விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 14 பேர் மீது கோவை நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கோவை அருகே உள்ள போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக். இவரது சார்பில், கோவையில் மது விற்பனையை தடை செய்ய வேண்டுமென கோவை 7-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் சார்பில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்திய தண்டனைச் சட்டம் 328-ன் படி, உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் பொருளான மதுபானத்தை விற்பனை செய்வது குற்றம் என்பதால் தமிழக அமைச்சரும், டாஸ்மாக் நிறுவனத் தலைவருமான நத்தம் விஸ்வநாதன், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் மதுபான தயாரிப்பு நிறுவனத்தினர் உள்பட 14 பேர் எதிரிகளாக அந்த மனுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 7-ல், நீதிபதி ஹேமந்த்குமார் முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூலை 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ண மூர்த்தி கூறும்போது, ‘மது உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்ற அறிவிப்புடன் அதை தயாரிப்பதும், உடல் நலனுக்கு தீங்கு என தெரிந்தே விற்பனை செய்வதும் இந்திய தண்டனைச் சட்டம் 328 பிரிவின் கீழ் குற்றம் என சட்டம் கூறுகிறது. எனவே டாஸ்மாக் மது விற்பனையை தடை செய்ய வேண்டும்.

கோவையில் மது விற்பனையை தடை செய்ய வேண்டுமென மனுதாரர் தொடர்ந்துள்ள வழக்கில், போத்தனூர் காவல் ஆய்வாளர், டாஸ்மாக் நிறுவனத் தலைவருமான நத்தம் விஸ்வநாதன் உட்பட 14 பேர் எதிரிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x