Published : 10 Aug 2019 01:37 PM
Last Updated : 10 Aug 2019 01:37 PM

நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை குறையும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை குறைய வாய்ப்புள்ளதாகவும் 5 நாட்களுக்குப்பின் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானிலை ஆய்வு இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

“மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கும், ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழையும், மலை சார்ந்த பகுதியில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

மலைப்பகுதியில் கனமழை இருந்தாலும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் லேசான மலைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 செ.மீ. மழையும், மேல் பவானியில் 19 செ.மீ. மழையும், கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 13 செ.மீ. மழையும், கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலை பகுதியில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழகம் கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கக்கூடும். மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம்.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக குஜராத் அருகில் வந்துள்ளது. அதனால் காற்றின் வேகம் குறைந்துள்ளதால் நீலகிரியில் மழை குறையும்.

அவலாஞ்சியில் மழை குறையும். கேரளாவில் மற்றும் மேற்கண்ட பகுதிகளில் மழையின் அளவு அடுத்த இரண்டு நாட்களுக்குச் சற்று குறையும். அடுத்த நான்கு நாட்கள் இடைவெளியில் மீண்டும் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம்.

தற்போது உயர் காற்றழுத்தம் இமயமலை நோக்கி நகர்கிறது. அவ்வாறு நகர்ந்தால் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மழைக்கு வாய்ப்புண்டு”.

இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x